நந்தினியை நினைச்சா சாப்பிட முடியலை... கொள்ளையன் மனைவி கதறல்
சென்னை: எனது கணவரின் குடிப் பழக்கத்தால் நானும் எனது 3 குழந்தைகளும் நடுத் தெருவில் நிற்கிறோம். எல்லாம் அந்த குடியால் வந்த வினை. எனது கணவரால் இறந்து போன நந்தினியை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறேன். சாப்பாடு கூட இறங்க மாட்டேன் என்கிறது என்று கதறுகிறார் கொள்ளையன் கருணாகரனின் மனைவி ரீனா.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ஆசிரியை நந்தினி மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாகர் ஆகியோர், கொள்ளையன் கருணாகரனின் செயலால் பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். தற்போது கருணாகரன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
கருணாகரனுக்கு ரீனா என்ற மனைவி உள்ளார். அவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது. இடையில் கருணாகரனின் போக்கு பிடிக்காமல் ரீனா பிரிந்துள்ளார். 2009 முதல் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது ரீனாவின் குடும்பமே இறந்து போன இருவருக்காக அழுது கொண்டுள்ளது. கருணாகரனை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார் ரீனா.

குடிப் பழக்கம்தான் காரணம்
ரீனா கூறுகையில், எனது கணவர் மது அருந்தாத வரை நல்லவராக இருப்பார். மது உள்ளே போய் விட்டால் மாறி விடுவார். என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் செய்வார். போதையில் இருக்கும் போது மட்டுமே அவர் தவறுகளை செய்துள்ளார்.

நந்தினியை நினைத்தால் அழுகையாக வருகிறது
அவர் செய்த குற்றத்தால் நாங்கள் தண்டனையை அனுபவித்து வருகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். 2 பேர் பலியானதை டி.வி.யில் பார்த்ததும் குடும்பத்தில் உள்ள அனைவருமே அழுதுவிட்டோம். எங்களால் சாப்பிடகூட முடியவில்லை. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. நந்தினியின் பெற்றோரை நினைத்தாலே அழுகை வந்து விடுகிறது.

இடையில் திருந்தினார்...
புளியந்தோப்பில்தான் முதலில் நாங்கள் வசித்து வந்தோம். அப்போது திருந்தி வாழ்ந்து வந்தார். டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த அவர் வெளியில் எங்கு சென்றாலும் நானும் கூடவே செல்வேன். என் கணவருக்கு தொடர்பு இல்லாத வழக்குகளிலும் அவரை கைது செய்து வந்தனர். இதனை கேள்விப்பட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் போலீசாரை கண்டித்தார். இதன் பின்னர் அதுபோல நடக்காமல் இருந்தது. போலீசார் அடிக்கடி போன் செய்து கணவரை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்கள்.

பிச்சை எடுக்கும் குழந்தைக்கு இரங்குவார்
எனது கணவர் இரக்க குணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பார். மழை வெள்ளத்தின் போது எங்கள் வீட்டுக்கு, காலில் அடிபட்டு நாய் ஒன்று வந்தது. அதற்கு மருந்து போட்டு தினமும் வேப்பேரியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். இப்போதும் அந்தநாய் எங்கள் வீட்டிலேயே உள்ளது. இப்படி எல்லோரிடமும் பாசம் காட்டும் அவர் மது குடித்தால் மட்டுமே மாறிவிடுகிறார் என்று கூறி அழுகிறார் ரீனா.
மது மனிதனை மிருகமாக்கி விடும் என்று சும்மாவா சொன்னார்கள்.. இதோ இன்று ஒருவரின் மதுப் பழக்கத்தால் இரு குடும்பங்களில் விளக்கு அணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications