ஜெ.க்கு ஓட்டுப் போட்டா நாடாளுமன்ற கட்டிடமே காணாமல் போய்விடும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் நாடாளுமன்ற கட்டிடமே காணாமல் போய்விடும் என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

ஈரோடு நகரம் நான் பிறந்த ஊர் என்று சொல்லுவதை விட என்னை அறிவுலகத்துக்குப் பெற்றெடுத்த ஊர் என்று சொன்னால் அதுதான் பொருத்தமாக இருக்கும். அத்தகைய ஈரோடு நகரத்தில் எனக்கு அறிவூட்டி, சுயமரியாதை உணர்வூட்டிய "குருகுலம்'' என்னைப் பொறுத்தவரையிலே ஈரோடு நகரமாகும்.

இதை என்னுடைய குருகுலம் என்று குறிப்பிட்டேன். தஞ்சை மாவட்டத்திலே நான் பிறந்த ஊர் திருக்குவளை என்றாலும் கூட, வளர்ந்த ஊர் திருவாரூர் என்றாலும் கூட என்னை வார்ப்படமாக்கி தமிழ் உலகத்துக்கு தந்த ஊர் ஈரோடு என்று சொன்னால் அது மிகை ஆகாது.

Karunanidhi accuses Jaya of stifling dissent

தந்தை பெரியார் அவர்களுடைய அறிவாற்றலை, அவருடைய வாழ்க்கை முறைகளை அவர் கற்றுத்தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அந்த மூன்று வார்த்தைகளின் பெருமைகளை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மோடி அலையை மூடிவிட்டு...

வந்திருப்பது நரேந்திர மோடி அலை; மோடி' அலை வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். "மோடி'' அலையை மூடி மறைத்துக்கொண்டு நம்முடைய எதிர்கால சமுதாயத்தினுடைய கீர்த்தியை, நம்முடைய எதிர் பார்ப்புக்களையெல்லாம் வீழ்த்துவதற்கு நாட்டிலே பயங்கரமான சூழ்ச்சிகள் செய்யப்பட்டு, அதற்கு அடிமையாகாமல் இருக்க, எங்களால் எச்சரிக்கப்படக்கூடிய ஒரு நிலைமை இன்றைக்கு தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலே இருக்கிறதா? இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தியா குறிப்பாக நம்முடைய தமிழ்நாடு "வந்தவர்களுக்கெல்லாம் பாய் விரித்த நாடு''. "வந்தவர்களுக்கெல்லாம் தண்டனிட்ட நாடு''. அந்த சமுதாயத்தைத் தூக்கிப் பிடித்து, பிடரியில் அடித்து, நீ பின் தங்கியவன் அல்ல, நீ சூத்திரன் அல்ல, நீ தமிழன், திராவிடன் என்று அச்சுறுத்தி, நம்மை ஏறு நடைச் சிங்கமாக ஆக்கிய தந்தை பெரியார், மறைந்த இந்தக் காலத்திற்குள், அறிஞர் அண்ணா இல்லாத இந்த வேளையில் தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், நான் இந்த எச்சரிக்கையை உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.

எப்படிப்பட்ட நிலைமையிலே நாம் இருக்கிறோம், தமிழகத்தில் ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அது ஆட்சியா? அல்லது அவர்கள் நடத்திக் காட்டுகிற காட்சியா? என்பதை நீங்களே புரிந்துக்கொள்வீர்கள். (பலத்த கை தட்டல்). தமிழ் நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்று முடிந்து, நீங்கள் செய்த - அதைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். உங்களுடைய கண்ணை மறைத்து செய்யப்பட்ட கபட நாடகத்தின் காரணமாக நீங்கள் ஏமாந்து போய் தமிழகத்திலே ஒரு ஆட்சி மலர்வதற்கு காரணமாக ஆகி விட்டீர்கள். அது எப்படிப்பட்ட ஆட்சி? என்ன செய்து கொண்டிருக்கிற ஆட்சி?

310 மடங்கு சொத்து குவிப்பு

ஊரிலே உள்ளவர்களையெல்லாம் குற்றஞ்சாட்டி, உன்னை சிறையிலே போடுவேன். உன்னைத் தண்டிப்பேன். உன் மீது புகார் மனு கொடுப்பேன், என்று ஊரிலே உள்ளவர்களையெல்லாம் எச்சரித்து - ஏமாற்றி - அவர்களை பயமுறித்தி, வாழ்ந்துகொண்டிருக்கிற, தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சிதான், இன்று நடைபெறுகின்ற அம்மையார் ஜெயலலிதாவினுடைய அ.தி.மு.க. ஆட்சி என்று சொன்னால், அது மிகையாகாது.

ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்காத போது இருந்ததை விட 310 மடங்கு அதிகச் சொத்துக்களை ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறார். என்ன சொல்லுகிறார்கள்? இதைப்பற்றி என்ன இவர்களால் விளக்கம் அளிக்க முடியும்?

இப்படிப்பட்ட ஏழை எளியவர்கள், இல்லாதவர்கள், பொல்லாதவர்கள், தமிழ்நாட்டை இன்னும் கொஞ்ச நாளைக்கு, இந்த தேர்தலிலே நீங்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் நான் சொல்லுகின்றேன் - பாராளுமன்றக் கட்டிடமே காணாமல் போனால் அதற்கு நாங்கள் ஜவாப்தாரிகள்'' அல்ல (பலத்த கைதட்டல்). வாக்களித்த நீங்கள்தான் ஜவாப்தாரி ஆவீர்கள் என்பதை எடுத்துச் சொல்லி, ஆகவே எச்சரிக்கையாக நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+