அதிமுகவுக்கு மாற்று திமுக- கருணாநிதி எப்பொழுதும் உண்மையை தான் கூறுவார்: வைகோ
சென்னை: அதிமுகவுக்கு மாற்று திமுக தான் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் என்றும் உண்மையை தான் கூறுவார் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நேதாஜி
நேதாஜி குறித்த உண்மையை வெளியிட வேண்டும் என்று நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நேரு அரசு நாட்டிற்கு வஞ்சனை செய்துவிட்டது. நான் நேரு மீது மிகுந்த மரியாதை உடையவன். ஆனால் அவர் நேதாஜி உயிரோடு இருந்தது தெரிந்தும் அவர் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டார்.

மத்திய அரசு
நேதாஜி ரஷ்ய சிறையில் சித்ரவதை அனுபவித்தார் என்றேன். அவரின் படையில் 40 ஆயிரம் தமிழர்கள் போராடினார்கள். தற்போது உள்ள மத்திய அரசை நான் குற்றம் கூறுகிறேன். நேதாஜி பற்றிய உண்மையை யார் மூடி மறைத்தாலும் அவர்கள் வரலாற்றில் மன்னிக்கப்படமாட்டார்கள்.

ஆம் ஆத்மி கட்சி
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கக் கேட்டு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை சந்தித்தேன். எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. கட்சி தலைமையிடம் பேசி முடிவு கூறுகிறோம் என்று கூறியுள்ளனர்.

கருணாநிதி
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவுக்கு மாற்று திமுக தான் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் எப்பொழுதும் உண்மையை தான் கூறுவார். ஊழல் செய்வதில் அதிமுகவுக்கு மாற்று திமுக தான்.

கட்சிக் கொடி
காரில் கட்சிக் கொடியை கட்டக் கூடாது என்கிறார்கள். எந்த கொடியையும் அவிழ்க்க வேண்டாம் என அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கட்சி கொடியை அவிழ்த்தால், உங்களின் கரை வேட்டியில் கட்சி கொடி உள்ளது என்று கூறி வேட்டியை அவிழ்க்கச் சொல்வார்கள்.












Click it and Unblock the Notifications