ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி

ஆலந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததால் அத்தொகுதிக்கு ஏப்ரல் 24ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளராக வி.என்.பி. வெங்கட்ராமன் போட்டியிடுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில், திமுக சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ். பாரதி திமுக சார்பில் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
ஆலந்தூருக்கு அறிமுகமான ஆர்.எஸ். பாரதி
பி.ஏ, பி.எல். படித்துள்ள பாரதியின் தந்தை பெயர் ராமன், தாயார் விஜயலட்சுமி. டாக்டர் சம்பூரமணம் என்ற மனைவியும், லட்சுமிகாந்தன் பாரதி, ஜெயகாந்தன் பாரதி என இரு மகன்கள் உள்ளனர்.
சுறுசுறுப்பான நகராட்சித் தலைவராக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக ஆலந்தூர் நகராட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தவர் ஆர்.எஸ்.பாரதி.
ஆலந்தூர் நகராட்சியில் உள்ள மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர் பாரதி. அரசாங்கமே செய்யட்டும் என எண்ணும் மக்களுக்கு மத்தியில், அவர்களையும் பணியில் ஈடுபடுத்தி ஆலந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்தவர் பாரதி. இந்தத் திட்டத்துக்காக பல விருதுகளையும் வென்றவர்.
1986ம் ஆண்டு முதல் முறையாக ஆலந்தூர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் தொடர்ந்து நான்கு முறை நகராட்சித் தலைவராக இவரே தேர்வானார்.
தமிழக நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். திமுக சட்டத் துறை செயலாளராக இருக்கும் பாரதி, சிறந்த மக்கள் சேவைக்காக பல விருதுகளையும் பெற்றவர்.
டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிக்கி பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்ததற்கு ஆர்.எஸ்.பாரதிதான் முக்கிய காரணம். காரணம், அவர்தான் அந்த ஊழல் வழக்கை தொடர்ந்தார் இதற்காக தாக்குதலுக்கும் ஆளானார்.
அந்த பயங்கர தாக்குதலுக்குப் பிறகும் பாரதி அந்த வழக்கில் தொடர்ந்து தீவிரம் காட்டினார். கடந்த லோக்சபா தேர்தலின் போதே அவர் எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications