'தாமதமாகும் நீதி; தடுக்கப்படும் நீதி'... சிறை அதாலத்துக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை: விசாரணைக் கைதிகளுக்கு விடிவுகாலம் தருவதாக அமைந்துள்ள சிறை அதாலத்திற்கு திமுகத் தலைவர் கருணாநிதி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி, நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள சிறைகளில் சிறை அதாலத் நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், சுமார் 100 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, சுமார் 2500 விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு...
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரொகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு 5-9-2014 அன்று பொதுவான ஒரு தீர்ப்பினை முக்கியமானதொரு வழக்கில் அறிவித்து, அந்த செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் காலத்தில் பாதியை, சம்பந்தப்பட்டவர் சிறையிலேயே விசாரணை கைதியாக கழித்திருந்தால், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முக்கியத் தீர்ப்பு...
மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் விசாரணை கைதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. நீதிபதி லோதா விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் நேரத்தில் இந்த முக்கியமானதொரு தீர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட நீதிமன்றங்களின் ஆய்வு...
மாவட்ட நீதிமன்றங்கள் அவற்றின் வரம்புக்கு உட்பட்ட சிறைகளுக்கு வாரம் ஒருமுறை சென்று ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ஒரு கைதி எவ்வளவு காலத்துக்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்பதை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர் ஒரு வேளை தண்டனை காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை விசாரணை கைதியாக சிறையிலேயே கழித்திருந்தால், அவரை அடையாளம் கண்டு, குற்றவியல் நடைமுறை சட்டம் 436-ஏ பிரிவின்படி, உடனடியாக விடுதலை செய்யலாம் என்றும், இந்த ஆய்வை மேற்கொள்ள 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும், வரும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் இந்த ஆய்வை மாவட்ட நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் வரம்புக்கு உட்பட்ட மாவட்டத்தில் செசன்சு நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் சிறைகளுக்கு சென்று ஆய்வு செய்து தண்டனை காலத்தில் பாதியை சிறையிலேயே கழித்த விசாரணை கைதிகள் யார் என்பதை கண்டறிய வேண்டுமென்றும், அந்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை மாவட்ட நீதிபதிகள் பிறப்பிக்க வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருக்கிறது.
கைதிகள் விடுதலை...
சுப்ரீம் கோர்ட்டு தற்போது அளித்திருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2,500 பேர் ஒரே நாளில் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.
வரவேற்பு...
ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளிக்காமல், அனைவருக்கும் பொதுவாக, விசாரணை கைதிகளுக்கு எல்லாம் விடிவு காலம் ஏற்படுகின்ற வகையில் "தாமதமாகும் நீதி; தடுக்கப்படும் நீதி" என்ற பழமொழியை நன்குணர்ந்து, அமைந்த தீர்ப்பு இது என்பதை சுட்டிக்காட்டி, அந்த தீர்ப்பினை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.