தேர்தலில் வெற்றி பெற்றால் உயிருள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் - கருணாநிதி உருக்கம்
திருவாரூர்: வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் என்னை வெற்றிபெற செய்தால் உங்களுக்காக என்றும் உழைப்பேன், உயிருள்ளவரை பாடுபடுவேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் கருணாநிதி, இந்த தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது திருவாரூர் தொகுதிக்குட்பட்ட விளமல் கல்பாலம் அருகே அவர் பேசுகையில், கடந்த முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறையும் மீண்டும் போட்டியிடுகிறேன்.
மீண்டும் என்னை வெற்றிபெற செய்தால் உங்களுக்காக என்றும் உழைப்பேன். உயிருள்ளவரை பாடுபடுவேன். இந்த கூட்டத்தை பார்க்கும்போது என் உறவினர்களை, என் குடும்பத்தினரை, நண்பர்களை பார்க்கும் உணர்வை பெறுகிறேன். புதிய ஆட்சிக்கு வழி செய்யும் வகையில் தாக்கத்தை உருவாக்க வேண்டும்.
திருவாரூரில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திருவாரூர் அரைவட்ட சாலைப்பணி திமுக ஆட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அப்பணி நிறைவுபெறும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
இதனைத்தொடர்ந்து, தேவர்கண்டநல்லூரில் பேசுகையில், தனது முயற்சியால் திருவாரூரில் ஆயிரம் கோடி ரூபாயில் மத்திய பல்கலைகழகம், 100 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓடாமல் இருந்த திருத்தேர் புதிதாக விஞ்ஞான ரீதியில் சீர்செய்யப்பட்டு, ஓடுவதற்கு பாடுபட்டுள்ளேன். தமிழகத்தில் சமூக மாற்றம் ஏற்பட திமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும் கருணாநிதி தனது உரையில் குறிப்பிட்டார்.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், சிங்கலாஞ்சேரி பகுதியில் ரயிலவே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும். எனக்கு ஆதரவு தரும்படி உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய வாழ்த்து, மகிழ்ச்சி, வரவேற்பை பார்க்கும்போது திமுகவுக்கு ஆதரவு வழங்குவீர்கள், என்னை வெற்றிபெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து அம்மையப்பன், காப்பணாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில வாக்கு சேகரித்த திமுக தலைவர் கருணாநிதி, ஆட்சிக்கு வந்ததும், சிறு, குறு என்ற பேதமின்றி அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.