காவிரியை கழிவு நீர் வடிகாலாக மாற்றும் கர்நாடகா…. கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை : காவிரி நதியில் கர்நாடகா கழிவு நீரை கலப்பதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கர்நாடக மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள புள்ளி விபரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அபாயம் ! ஆபத்து !! அவசர கவனம் தேவை !!!
கர்நாடக மேலவையில் பேசிய அந்த மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ், "பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில், தினமும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக மொத்தம் 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

காவிரியில் கலக்கும் கழிவு நீர்
இதில் 148 கோடி லிட்டர் கழிவு நீராக, ஆறுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக பல்வேறு வகைகளிலும் தமிழகத்திற்குள் செல்கிறது" என்றும்; "88.9 கோடி லிட்டர் கழிவு நீர் பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகளின் வழியாகவும், 59.3 கோடி லிட்டர் கழிவு நீர் அர்காவதி மற்றும் காவிரி ஆறுகளிலும் கலந்து தமிழகத்திற்குச் செல்கிறது" என்றும் தெரிவித்திருக்கிறார். கர்நாடக அமைச்சர் மேலவையில் தந்திருக்கும் இந்தத் தகவல் நமக்குப் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

அபாய அறிவிப்புகள்
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் காவிரியில் கலக்கும் நீரின் தன்மை குறித்துப் பரிசோதித்து வழங்கியிருக்கும் ஆய்வு முடிவுகளும், அபாய அறிவிப்புகளையே வெளியிடுகின்றன.

நீரில் 10 மடங்கு மாசு
கர்நாடகத்திலிருந்து காவிரி நீரில் கலந்து விடப்படும் கழிவு நீரின் காரணமாக, நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை விட பத்து மடங்கு அதிகமாக நீரில் மாசு நிறைந்திருப்பதாகவே மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வடிகால்வாயாக மாறும் காவிரி
கர்நாடகம், பூகோள ரீதியாக மேடான பகுதி என்பதால், அங்கிருந்து கழிவு நீர் நேரடியாக, தமிழகத்தில் காவிரியில் கலக்கும் சூழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி வடிகால்வாயாக மாற, கர்நாடகமே காரணம்.

தொற்று நோய்கள் பரவும் அபாயம்
மாசு நிறைந்த நீரால் வேளாண்மை உற்பத்தி குறைந்துவிட்டது; மேட்டூர் அணையில் உள்ள நீரின் வண்ணமும் மாறிவிட்டது. இந்த நீரைப் பருகுவதால் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன" என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் இளங்கோ எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கர்நாடகாவின் கொடூர செயல்
"சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்களும் காவிரி நீரைக் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். குடிநீரில் நஞ்சைக் கலப்பது போல், கழிவு நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது மிகவும் கொடூரமான செயல்" என்று ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவரும்; "தமிழக மக்கள் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தும் நீரில், கழிவு நீரை கர்நாடகம் கலப்பது தேச துரோகச் செயல்" என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி அவர்களும் தெரிவித்திருப்பதாக ‘தினமலர்' நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காத்திருக்கும் பேராபத்து
காவிரி நதி நீரில் கழிவு நீரைக் கலப்பதால், அதைக் குடிநீராகப் பயன்படுத்தும் தமிழக மக்களுக்கும், பாசனத்திற்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் நேர்ந்திடும் பேராபத்துகளைக் கருத்தில் கொண்டு, மனிதநேயமற்ற இந்தக் கொடுமையைக் கடுமையாகக் கண்டிப்பதற்கும், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, கழிவு நீர் அபாயத்தைத் தடுப்பதற்கும் தமிழக அரசு தாமதமின்றி முன்வர வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications