தமிழக மின்நிலைமை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்... கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: மின் வெட்டை அறவே நீக்குவோம் என உறுதியளித்து பதவியில் அமர்ந்த அதிமுக தற்போதைய தமிழக மின்நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சோகமான சம்பவம்...
கேள்வி:- மத்திய அமைச்சர் முண்டே பதவியேற்ற 10 நாட்களில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டாரே?
பதில்:- மிகவும் சோகமான ஒரு சம்பவம் அது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரமோத்மகாஜன் சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் அசாதாரணமான முறையில் மறைந்தார். அவருடைய மைத்துனர்தான் தற்போது மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கோபிநாத் முண்டே. இந்த ஆண்டு இறுதியில் மராட்டிய மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தான் முண்டே. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இரங்கல்...
இந்தியாவின் தலைநகரின் மத்திய பகுதியிலே முக்கியமான சாலை ஒன்றில் மத்திய அமைச்சரின் ஒருவரின் கார் விபத்துக்கு ஆளாகியுள்ளது. விபத்தில் முண்டேவுக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை என்ற போதிலும், அவருக்கு ஏற்கனவே இருந்த ரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்கள் காரணமாக விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மறைந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எளிய சாதாரண குடும்பத்தில் பிறந்தவரான முண்டே தனது கடின உழைப்பின் காரணமாக முன்னேறியவர். அவரது மறைவு குறித்து தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மின்வெட்டு பிரச்சினை...
கேள்வி:- வல்லூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறதே?
பதில்:- ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்ட போதே அ.தி.மு.க. ஆட்சிக்கு வருமானால் மூன்றே மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்வோம் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு பல முறை முதலமைச்சர் ஜெயலலிதாவும், மின்துறை அமைச்சரும் மின்வெட்டே இல்லாமல் செய்திடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் மின்வெட்டுதான் நிறுத்தப்படவில்லை. பெரிய, சிறிய தொழிற்சாலைகள் எல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக மூடப்பட வேண்டிய நிலை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டது.
மின்சாரம் கிடைக்கவில்லை...
முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், ‘‘பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவுத்திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறியிருக்கிறார். அதாவது புதிய மின் உற்பத்தியை இவருடைய தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளில் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளின் விளைவாக, 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் முதலமைச்சர், இந்தப் புதிய மின் உற்பத்தி நிறுவு திறனுக்கான மின் திட்டங்கள், எங்கெங்கே-எந்தெந்த தேதியில் இவர்களுடைய ஆட்சியினால் தொடங்கப்பட்டன என்று விளக்கிடத்தயாரா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கத்தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதாவினால் புதிதாகத்தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் எதுவும் இதுவரை தொடங்கப்படவும் இல்லை, அதிலிருந்து தற்போது மின்சாரம் கிடைக்கவும் இல்லை.
வெள்ளை அறிக்கை...
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த மின்சாரம் யாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமானால் அனைவரும் விவரங்களைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
மெட்ரோ ரயில்...
கேள்வி:-3-6-2014 அன்று பிரதமரைச் சந்தித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த மனுவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்றெல்லாம் கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே இந்த மெட்ரோ ரயில் திட்டமே கூடாது என்றும் மோனோ ரயில் திட்டம் தான் தேவை என்றும் கூறி வந்தாரே?
பதில்:- ‘‘மெட்ரோ'' திட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா தற்போது பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம் பாகப்பணிகளை நிறைவேற்ற ரூ.36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
முரண்பாடு...
மெட்ரோ திட்டமே கூடாது என்று சொன்னவர்கள், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மறுத்தவர்கள், தற்போது டெல்லிக்குச் சென்று அதே மெட்ரோ திட்டத்திற்கு நிதி வேண்டுமென்று கேட்கிறார்கள் என்றால், வாக்களித்த மக்கள் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்ள வக்கற்றுப் போய் விட்டார்களா என்பதுதான் நமக்குள்ள அய்யப்பாடு.
இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.