முலாயமையும் அகிலேஷையும் பார்க்கும்போது கருணாநிதி- ஸ்டாலின் பரவாயில்லை!
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் குடும்ப சண்டை சமாஜ்வாடி கட்சியிலும் ஆட்சியிலும் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்க்கும் போது மவுனமான அதிகாரப் போட்டி நடத்தும் திமுக தலைவர் கருணாநிதியும் முக ஸ்டாலினும் எவ்வளவோ பரவாயில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சித்தப்பா சிவ்பால் யாதவை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். இதனால் ஆட்சியிலும் கட்சியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டு சமாஜ்வாடி கட்சி உடையும் நிலை உருவாகி உள்ளது.
இதற்காக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார் முலாயம்சிங் யாதவ். அந்த கூட்டத்திலும் இருதரப்பும் சரமாரி புகார்களை மாறி மாறி கூறினர். முலாயம்சிங்கின் சமாதான முயற்சி எடுபடுமா? அதுவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை தக்க வைப்பார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மவுனமாக மல்லுக் கட்டு
உத்தரப்பிரதேச அக்கப்போரை பார்க்கும் போது தமிழகத்தில் யாருக்கு அதிகாரம் என மவுனமாக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது மகன் முக ஸ்டாலினும் நினைவுக்கு வராமல் போகமாட்டார்கள். அதே நேரத்தில் முலாயம் குடும்பத்தினரைப் போல இப்படி வெளிப்படையாக மோதிக் கொள்ளாமல் நாகரிகமான மோதலை தொடர்கிறது கருணாநிதி குடும்பம்.
வாசனை சேர்க்க முயற்சி
உதாரணமாக சொல்வதானால், உள்ளாட்சி தேர்தல் கூட்டணியில் ஜிகே வாசனை சேர்க்க ஸ்டாலின் முயற்சித்தார். ஆனால் கனிமொழி தரப்பு இதை விரும்பவில்லை. அவர் கருணாநிதியிடம் தெரிவிக்க, ஸ்டாலினுக்கு செக் வைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசை சந்திக்க அழைத்தார் கருணாநிதி.
செக் வைத்த கருணாநிதி
வாசனுடன் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின், திருநாவுக்கரசர் கோபாலபுரம் வருகிறார் என்ற உடன் அங்கேயும் சென்றார். திருநாவுக்கரசரை கோபாலபுரம் இல்லத்தி வரவேற்றார். பின்னர் சட்டசபை தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுடனேயே உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி என நாசூக்காக அறிவித்தது திமுக.
ஸ்டாலின் பதில்
இது தொடர்பாக ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, திமுக பொதுச்செயலர் அன்பழகன் யாருடன் கூட்டணி என அறிவித்திருக்கிறாரோ அதுதான் திமுக நிலைப்பாடு என ஒற்றைவரியில் பதிலளித்தார்.
பரவாயில்லையே
கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி நாடறிந்ததாக இருந்தாலும் இருவருமே அதை பகிரங்க மோதலாக வெளிப்படுத்தாமல் செயல்பாடுகள் மூலமாக காய் நகர்த்தல்கள் மூலமாக நாகரிகமாகவே வெளிப்படுத்தி வருவது முலாயம்சிங் யாதவ் குடும்பத்தை ஒப்பிடும்போது பரவாயில்லை என்றே கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.