சட்டசபையில் கருணாநிதிக்கு பின்வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்வதா?.. ஸ்டாலின் கடும் அதிருப்தி
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருணாநிதி வந்து செல்வதற்கு வசதியாக இந்த இருக்கை ஒதுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
சபாநாயகரிடம் திமுக கோரிக்கை வைத்தும் 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் சட்டசபைக்கு ஒரே ஒரு நாள் வருகை தரும் கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு செல்வது வாடிக்கையாக இருந்தது.

ஜெ. பதவி ஏற்பு விழா
தற்போது 2016 சட்டசபை தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. கடந்த மே 23-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா பதவியேற்கும் விழா சென்னை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக சட்டசபை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

ஸ்டாலின் இருக்கை சர்ச்சை
ஆனால் அவருக்கு முன்வரிசை ஒதுக்கப்படவில்லை. பின்வரிசையில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஸ்டாலினை அவமதிக்கும் எண்ணமில்லை. இது என் கவனத்துக்கு வரவில்லை. ஸ்டாலின் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவருக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

சட்டசபையில் கருணாநிதி
இதையடுத்து கடந்த மே 25-ந் தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து முன் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தார்.

திமுக கோரிக்கை
இந்த நிலையில் சட்டசபையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது அவர் அமர்ந்திருந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இருக்கை ஒதுக்கீடு- ஸ்டாலின் அதிருப்தி
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு 2-வது வரிசையில் அதாவது மு.க.ஸ்டாலினுக்கு பின்புறம் கருணாநிதிக்கு முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடம், கருணாநிதி வந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியானதாக இல்லை என திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications