அரசியல் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்: தஞ்சையில் உருகிய கருணாநிதி - தொண்டர்கள் அதிர்ச்சி
தஞ்சாவூர்: 10 வயது தொடங்கி அரசியல் பணி ஆற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருணாநிதி, இந்த நாட்டைப்பற்றி கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சிக்கிய ஆட்சியை மீட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். என்னுடைய மக்களை காப்பாற்ற வேண்டும்.
திராவிட இயக்கத்தின் குறிக்கோளையே, திராவிட இயக்கம் ஏன் தோன்றியது என்ற நோக்கத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க இது தான் சரியான தருணம் என்று கூறினார்.
வெற்றி, தோல்வி சகஜம்
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றி பெற்றால் வீராப்பு கொள்வதும், தோல்வி அடைந்தால் முகத்தை கீழே தொங்கப்போடுவதும் அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. தி.மு.க.வை நடத்தி செல்கின்ற பெரும் பொறுப்பு வாய்ந்த பேரியக்கமாக நான் கருதுகிறேன். அதற்கு யாராவது ஊறு விளைவித்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன்.
கடைசி மூச்சு உள்ளவரை
திமுகவினருக்கு எதிராக பேசுபவர்களின் கருத்துகளை எதிர்த்து, எழுத்துக்கு, எழுத்து, பேச்சுக்கு பேச்சு என்று அந்த நாள் முதல் இந்த நாள் வரை போராடுகிறேன். அண்ணாவின் தம்பிகளான எங்களை யாரும் வீழ்த்த முடியாது. கடைசி மூச்சு இருக்கும்வரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்.
இளைஞர்கள் கூட்டம்
இங்கு இளைஞர்கள் கூட்டத்தை பார்க்கிறேன். இளைஞர்கள் தான் இந்த சமுதாயத்தின் ஆணி வேர்கள். அவர்களால் தான் இந்த உலகத்தில் பல புரட்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் தான் நாட்டை ஆள கூடியவர்கள்.
நடக்க முடியவில்லை
என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளோடு வாழ வேண்டும்.
சபதம் ஏற்போம்
தமிழர்களை காப்பாற்ற, நம்மை விட்டால் யாரும் இல்லை. வேறு யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள். நாம்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எனவே எந்த தியாகத்துக்கும் தயாராகுங்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது. நாம் எதற்கும் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்ற வேண்டும்.
ஓய்வு பெற விருப்பம்
என்னைப்பொறுத்தவரை எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியல் பணிஆற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஓய்வு ஒன்று தான் நான் பட்டபாட்டுக்கு, நான் உழைத்த உழைப்புக்கு, நான் அடைந்த பயன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
பேச முடியவில்லை
நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன்.
தியாகம் செய்யுங்கள்
நீங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கும் கொள்கை, உணர்ச்சி, வேகத்தை.
தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே உங்களை கேட்டுக்கொள்வது தியாகத்துக்கு தயாராக இருங்கள்.
சுதந்திரம் கிடைக்காது
இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்சமுதாயத்துக்கு விடுதலை, சுதந்திரம் கிடையாது. எனவே தேர்தலில் நாம் சீரோடும், சிறப்போடும் நடப்போம். என்னை நீங்கள் ஆதரிப்பது என்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கிற கொள்கை, அந்த உணர்ச்சியை, அந்த வேகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.