பாக். பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய பிரதமர் மோடிக்கு கருணாநிதி பாராட்டு!
சென்னை: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
பொறுமைக்கும் எல்லை உண்டு; "குட்டக் குட்ட குனிந்து கொண்டே போவது" தன் மானத்திற்கு இழுக்கு. இதுவரை எத்தனையோ முறை, பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் நமது நாட்டின் எல்லைக்குள் திடீர் திடீரென்று நுழைந்து நம்மைத் தாக்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
உரி தாக்குதல்
இந்தியா எதையும் தாங்கிக் கொள்ளும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நினைத்துக் கொண்டு செயல்பட்டது. ஜம்மு-காஷ்ரின் உரி பகுதியிலே அமைந்துள்ள நமது ராணுவத் தலைமையகத்தின் மீது, பாகிஸ்தான் பயங்கர வாதிகள் அண்மையில் திடீர்த் தாக்குதல் நடத்தி, இந்திய ராணுவத்தினர் 18 பேர் உயிரைப் பறித்தனர்.
நவாஸ் கருத்து
ஏற்கனவே பதான்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தினார்கள். உரி பகுதியில் தாக்குதல் நடத்தியது பற்றிப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அது இந்தியாவினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் எனக் கூறினார்.
அதிரடி தாக்குதல்
மேலும், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா பகுதிகளை யொட்டியுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப் போவதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில், 28-9-2016 அன்று நள்ளிரவில் நமது ராணுவத்தினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஏழு பயங்கர வாத முகாம்கள் பூண்டோடு அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பயங்கரவாதிகளும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
மோடிக்கு பாராட்டு
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மத்திய அமைச்சரவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடி, பிரச்சினைகளைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளது. இந்திய ராணுவம் அனைத்தையும் பொறுத்துக் கொண்டே போகாது என்பதற்கொப்ப, தேவைப்பட்டால் இப்படிப் பட்ட தாக்குதல்களையும் நடத்தும் வல்லமை மிக்கது என்பதை மெய்ப்பித்திடும் வகையில் தாக்குதலில் ஈடுபட்ட நமது ராணுவத்தையும், அதற்குக் காரணமான இந்தியப் பிரதமர் மோடி அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.