கனிமொழி வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுக்குப் பின் சென்றார் கருணாநிதி
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுக்குப் பின் சென்றார் கருணாநிதி.
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையான திமுக தலைவர் கருணாநிதி சென்றார்.
கருணாநிதிக்கு முதுமையால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே கருணாநிதி தங்கி இருந்தார்.
வழக்கமாக அண்ணா அறிவாலயம், மகள் கனிமொழி வீட்டுக்கு கருணாநிதி சென்றுவிட்டு கோபாலபுரம் திரும்புவார். உடல்நலக் குறைவால் அவரது இந்த அன்றாட நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்தன.
அண்மைக்காலமாக கருணாநிதி உடல்நலம் தேறி வருவதால் முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கருணாநிதியை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
பொங்கல் விழாவையொட்டி நேற்று கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்நிலையில் இன்று சிஐடி காலனியில் உள்ள மகளும் ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி வீட்டுக்கு சென்றார் கருணாநிதி.