அம்பேத்கர்- பெரியார் மாணவர் வாசகர் வட்ட தடை நீக்கம்- கருணாநிதி, திருமா வரவேற்பு
சென்னை: அம்பேத்கர்- பெரியார் பெயரிலான மாணவர் வாசகர் வட்ட தடை நீக்கத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற பெயரில் மாணவர் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு புகார் கடிதம் சென்றது.
இதை தொடர்ந்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து ஐ.ஐ.டி. நிர்வாகம் உத்தரவிட்டது. இதை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை ஐ.ஐ.டி. நிர்வாகம் நீக்கியது.
கருணாநிதி வரவேற்பு
இத்தடை நீக்கத்தை வரவேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:
ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் இந்த முடிவினை தி.மு. கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த, போராடிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'31-5-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், "சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் உள்ள "அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்" என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - "மொட்டைக் கடிதத்தின்" காரணமாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறுவனம் தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் உடனடியாக பிரதமர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் அமைதியையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலைநாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டுமென்றும்" கேட்டுக் கொண்டிருந்தேன்.
தலைவர்கள் குரல்
என்னைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும் இது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அந்த நிறுவன இயக்குனருக்கு நேரடியாகக் கடிதமே எழுதியிருந்தார். தி.மு.கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இவைகளின் விளைவாக நேற்றையதினம் ஐ.ஐ.டி. நிர்வாகம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையினை நீக்கியதோடு, சுயேச்சையான அமைப்பாக அது செயல்பட அனுமதி அளித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஸ்டாலின்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஐ.ஐ.டி. சென்னையில் மீண்டும் "அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம்" சுதந்திரமான மாணவர் அமைப்பாக செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன்.
விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆட்சேபணைக்குரிய கருத்துக்கள் பற்றி விவாதிப்பதற்குக் கூட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
சட்டத்திற்கு உட்பட்டும், கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளுக்குட்பட்டும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு மாணவர் அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் இளைய தலைமுறைதான். எனவே அவர்கள் ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என்பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.
திருமா
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:
இது ஜனநாயக போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்தியலுக்கு கிடைத்த வெற்றி.
ஐ.ஐ.டி. நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
அர்ஜூன் சம்பத் எதிர்ப்பு
இதனிடையே அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை நீக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், கல்வி நிலையங்களில் தேச நலனுக்கு எதிரான சக்திகளை அனுமதிக்கக் கூடாது என்றார்.