"யோகா தினம்- இந்துத்துவாவின் ஒரு அங்கம்"- யெச்சூரியின் கருத்துக்கு கருணாநிதி ஆதரவு!!
சென்னை: சர்வதேச யோகா தினம் என்பது இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமேயொழிய வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கும் கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி: மத்திய அரசு கொண்டாடவிருக்கும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம் பற்றி?
பதில்: யோகாவை பெரிதும் விரும்புபவன் தான் நான்! இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன் தான்.
யோகக் கலையில் வல்லுனரான தேசிகாச்சாரி அவர்களிடம் அந்தக் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்தான்.
நான் எழுதிய ஒரு கட்டுரையிலே கூட, நடைப் பயிற்சி மூலம் முக்கியமாக உடலின் எடையைக் குறைப்பது - மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசப் பைகளை முறையாக இயங்கச் செய்வது - குருதியோட்டத்தைச் சீராக்கிக் கொள்வது - அதன் அடிப்படையில் இருதயத்துக்குப் பாதுகாப்பு உருவாக்குவது - யோகப் பயிற்சி மூலம் எலும்புகள், நரம்புகளுக்கு வலுவூட்டுவது - தியானப் பயிற்சி மூலம் மன அமைதி காண்பது; இவை போன்றவை வாழ்வுக்கு இன்றியமையாதவை என்றே தெரிவித்திருக்கிறேன்.
"சர்வதேச யோகா தினம் என்பது இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமே யொழிய வேறல்ல" http://t.co/7ZURlLaqKE #yoga pic.twitter.com/CXiIawHcHR
— KalaignarKarunanidhi (@kalaignar89) June 15, 2015
ஆனால் அரசின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது பற்றி தோழர் சீத்தாராம் யெச்சூரியிடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அதாவது நாட்டிலே உள்ள குழந்தைகளில் 1 கோடியே 95 இலட்சம் குழந்தைகள் முறையாக உணவு கிடைக்காமல், பசி, பட்டினியோடு படுக்கச் செல்கிறார்கள்; 24% போதிய சத்துணவு இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மோசமான நிலையிலே இருக்கும்போது அவர்களால் எப்படி யோகாசனம் செய்ய முடியும்? 3 வயதுக்கும், 6 வயதுக்கும் இடையிலான குழந்தைகளைப் பராமரிப்பதற்காக அங்கன்வாடி உட்பட பல திட்ட ஊழியர்களை முந்தைய அரசு அமர்த்தியிருந்தது.
பா.ஜ.க. அரசு இத்திட்டங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு முறையான ஊதியம் அளிக்காதது மட்டுமல்ல; இத்திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச யோகா தினம் என்பது இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமேயொழியவேறல்ல" என்று கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் யெச்சூரியின் கருத்தும் சிந்தித்துப் பார்க்கத்தக்கதே...