நீ நிறைய பணியாற்ற வேண்டியிருக்கிறது... ஸ்டாலினை சமாதானப்படுத்திய கருணாநிதி
சென்னை: ராஜினாமா செய்வதற்கு இது ஏற்ற நேரமும் அல்ல. அது தேவையும் இல்லை. கழகத்திற்கு நிறைய நீ (ஸ்டாலின்) பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று கூறி ராஜினாமா செய்யும் முடிவை எடுத்த பொருளாளர் மு.க.ஸ்டாலினை, திமுக தலைவர் கருணாநிதி சமாதானப்படுத்தியதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இன்று நடந்த ஸ்டாலின் ராஜினாமா படல பரபரப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த நடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்ததைத் தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கின்ற பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கலைஞரிடம், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கலைஞர், அப்படியெல்லாம் செய்வதற்கு இது ஏற்ற நேரமும் அல்ல. அது தேவையும் இல்லை. கழகத்திற்கு நிறைய நீ (ஸ்டாலின்) பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு தோல்வியால் கழகம் அழிந்துவிடக் கூடியது அல்ல. இது ஆண்டாண்டு காலத்திற்கு இருக்கக் கூடியது. பல தோல்விகளை கண்டிருப்பது. எனவே வருங்காலத்தில் இயக்கத்தை நடத்தக் கூடிய ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய நீர் (ஸ்டாலின்) என்று ஸ்டாலினிடம் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின், தான் வகித்த பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானதும், எங்களைப்போன்றவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அவரிடம் இத்தகைய முடிவை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். கலைஞரின் அறிவுரையை ஏற்றும், எங்களைப்போன்றவர்களின் கோரிக்கையை ஏற்றும், தான் ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்றார் துரைமுருகன்.
செய்தியாளர்கள் மீது தாக்குதல்
இதற்கிடையே, ஸ்டாலின் வீட்டு முன்பு செய்திக்காக குவிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மீது திடீரென திமுகவினர் தாக்குதல் நடத்தினர். டிவி டுடே என்ற நிறுவனத்தின் காமெராமேன் டேனியல் மீது கூடிநின்ற தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். காமராக்கள் உடைக்கப்பட்டன. இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல ஹெட்லைன்ஸ் டுடே நிருபர், டைம்ஸ் நவ் நிருபர் ஷபீர் அகமத், புதிய தலைமுறை நிருபர் கார்த்திகேயன் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களையும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்கினர். அங்கிருந்த பத்திரிக்கையாளர்களின் கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.