ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மாலை அஞ்சலி செலுத்துகிறார் கருணாநிதி?
ஜெயலலிதா நினைவிடத்தில் கருணாநிதி இன்று அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. நினைவிடத்துக்கு இன்று மாலை செல்கிறார் கருணாநிதி.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை அஞ்சலி செலுத்த இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அப்பலோவில் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட போதே அவர் நலம்பெற வேண்டும் என வாழ்த்தியிருந்தார் கருணாநிதி. 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் ஜெயலலிதா காலமானார்.
அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட போது திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
கருணாநிதியும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இதனிடையே மருத்துவமனையில் இருந்து கருணாநிதி நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆனார்.
இன்று காலை திமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு இன்று மாலை சென்று அஞ்சலி செலுத்த கருணாநிதி முடிவு செய்துள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.