மத்திய அரசு, கேரளாவுக்கு தமிழக அரசு பதில் கடிதமே அனுப்பவில்லையாமே?
மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் திட்டத்தை ஆட்சேபித்து மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றத் துறை மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் வந்த செய்தியில், With the Tamil Nadu Government failing to respond to "several letters" sent by the Union Ministry of Environment and Forests and the Kerala Government - அதாவது "மத்திய அரசும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்காத நிலையில்"என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பல முறை கடிதம் எழுதியதாக நேற்று தெரிவித்திருக்கிறார். இதிலே எது உண்மை?
முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவது போல தமிழக அரசு பல கடிதங்கள் எழுதியது உண்மை என்றால், எந்தெந்த தேதியில் கடிதங்கள் தமிழக அரசின் சார்பில் அண்மைக் காலத்தில் எழுதப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் தெரிவிக்க வேண்டாமா? அப்பொழுது தானே அவரது கூற்றில் உள்ள உண்மை விளங்கும்.
அது மாத்திரமல்ல; தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, சிறுவாணியில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்ற நிலையை உத்தேசித்து, உடனடியாக மத்திய-மாநில அரசுகள் சிறுவாணியில் கேரள அரசு அணையைக் கட்டுவதைத் தவிர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொங்கு மண்டலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று என்னுடைய ஒப்புதலைப் பெற்று நடத்தப்படுமென்று நாமக்கல் நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் அறிவித்திருக்கிறார்.
அதன்படி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் கோவை சிதம்பரம் பூங்காவில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சிறுவாணியில் அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கழகத் தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பாக கழகத்தின் குரலை எதிரொலிக்க வேண்டுமென்றும்; மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.