குமாரசாமி தீர்ப்பில் கூட்டல் கணக்கில் எல்லாம் தப்பு தப்பா இருக்கே.... போட்டு தாக்கும் கருணாநிதி
சென்னை: ஜெயலலிதா விடுதலைக்காகவே அவசரம் அவசரமாக தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் 11-5-2015 அன்று கர்நாடக உயர் நீதி மன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில் நீதிபதி முக்கியமாக ஜெயலலிதா மீது குற்றஞ்சாட்டியவாறு 66 கோடி ரூபாய் சொத்து சேர்க்கவில்லை, அந்தக் கணக்குத் தவறு என்பதைத் தான் குறிப்பாக எடுத்துக் காட்டி, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புக்கு மாறான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, இந்தியன் வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பட்டியலை நீதிபதி குறிப்பிட்டவாறு சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால்,
ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் ரூ 1,50,00,000
குணபூசனியிடமிருந்து மாற்றப்பட்ட கடன் ரூ 3,75,00,000
ஜெயலலிதா பெற்றக் கடன் ரூ 90,00,000
ஜெ ரியல் எஸ்டேட் பெற்றக் கடன் ரூ 25,00,000
ஜெ.எஸ். ஹவுசிங் பெற்றக் கடன் ரூ 12,46,000
ஜெ. பார்ம் ஹவுஸ் பெற்றக் கடன் ரூ 50,00,000
சசிகலா பெற்றக் கடன் ரூ 25,00,000
வி.என். சுதாகரன் பெற்றக் கடன் ரூ 1,57,00,000
ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெற்றக் கடன் ரூ 1,65,00,000
மகாலட்சுமி திருமண மண்டபத்திற்காக கடன் ரூ 17,85,274
ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் மேலே கண்ட பட்டியலில் உள்ள பத்து கடன்தொகையையும் கூட்டல் கணக்குத் தெரியாத யார் ஒருவரை விட்டுக் கூட்டச் சொன்னால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும். ஆனால் கர்நாடக மாநில உயர் நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் வியாக்ஞானம் செய்து, அவரை விடுதலை செய்திருக்கிறார்.
இதைப் போலவே தான் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட மாளிகையின் மதிப்பையும் சுதாகரன் திருமணச் செலவையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக்கிறார். அப்படிக் காட்டியதற்காக அடிப்படை எதையும் தீர்ப்பிலே அவர் விவாதிக்கவில்லை. தன்னிச்சையாகவே ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளையெல்லாம் குறைத்துக் காட்டியிருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது.
பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பில் பேராசிரியர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரின் எழுத்து மூலமான வாதங்களைப் பரிசீலித்து அதற்கு விளக்கமான தீர்ப்பினை அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தும், அவருடைய அறிவுரையினை நீதிபதி குமாரசாமி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.
குறிப்பாக இந்தத் தீர்ப்பு கூட்டுத் தொகையைக் கூட மிக மோசமான அளவுக்கு தவறாகக் குறிப்பிட்டு, அந்தத் தவறான தொகையின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பு முதலிலே ஒன்று எழுதப்பட்டு, பின்னர் அவசர அவசரமாக மாற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலே தான் அமைந்துள்ளது.
இதற்கெல்லாம் உச்ச நீதிமன்றத்திலே தான் உண்மையான விளக்கம் கிடைத்திட வேண்டும். கர்நாடக அரசின் அரசு வழக்கறிஞர் இந்தத் தீர்ப்பு பற்றி மிக விளக்கமாகக் கூறி, உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.
எனவே அதன்படி கர்நாடக அரசு இந்த வழக்கில் உரிய முறையில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications