காவேரி நடுவர் மன்றத்துக்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்
கேள்வி :- காவேரி நடுவர் மன்றத்திற்குத் தலைவர் பதவி காலியாக இருப்பதால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்கிறார்களே?
பதில்: காவேரி நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த நீதிபதி பி.எஸ். சவுகான், இந்திய சட்ட ஆணையத் தலைவராக நியமிக்கப் பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் பதவியிலிருந்து விலகி விட்டதால் காவேரி நடுவர் மன்றம் தற்போது தலைமை இல்லாத நிலையில் உள்ளது.

இந்த நடுவர் மன்றத்தில் இப்போது என்.எஸ். ராவ் மற்றும் நீதிபதி அகர்வால் ஆகிய உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 2007ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று இருந்த நீதிபதி என்.பி. சிங் நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த போது, மூன்று மாநிலங்களின் சிறப்பு அனுமதி மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், விளக்கம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது முறையல்ல என்று கூறி அவற்றைப் பரிசீலிக்க தலைவராக இருந்த நீதிபதி என்.பி. சிங் மறுத்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி சவுகான் 2014இல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதால், நடுவர் மன்றத்தால் மனுக்களை பரிசீலிக்க முடியவில்லை. எனவே நடுவர் மன்ற விண்ணப்பங்களும், நீதிமன்ற மேல்முறையீடுகளும் கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் காவேரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலைவர் நியமிக்கப்பட வேண்டும்; நிலுவையில் இருந்து வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications