மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்
கேள்வி :- மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு, உரிய தகுதி நிலைகளில், பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?
பதில்: மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான கோரிக்கை அது. மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாக 2015ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட சிவில் தேர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது.

வெற்றி பெற்ற 1078 பேர் பல்வேறு நிலைகளில் பணி வாய்ப்புக் காக தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், தேர்வு செய்யப்பட்ட 1078 பேரில், 926 பேருக்கு மட்டுமே பணி நியமன உத்தரவு அனுப்பப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் 120 பேருக்கு இதுவரை பணி வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
வருவாயைக் காரணமாகக் கூறி அல்லது பொதுப் பட்டியலில் இருப்பதாகக் கருதி, வழங்கப்பட வேண்டிய பணியை வழங்காமல், உரிய பணியின் தகுதி நிலை குறைத்து வழங்கப் பட்டுள்ளது.
35 பேருக்கு அவர்களின் பெற்றோர் பொதுத் துறையில் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டு, பணி நியமன ஆணை வழங்க மறுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் பணி நியமனம் வழங்கப்படாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள்.
பணி நியமன ஆணையில் இதர பிற்படுத்தப்பட்டோர் எவரும் இடம் பெறவில்லை. சமூக நீதி அடிப்படையில் இதுபற்றி மத்திய அரசு குறிப்பாக பிரதமர் அவர்கள் கவனம் செலுத்தி, சமூக நீதி தத்துவத்திற்கு எதிரான "க்ரீமிலேயர்" முறையை நீக்கவும், தேர்வாகியுள்ள பிற்படுத்தப்பட்டோரின் நலனைக் காத்திடவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பதவிகளில் பொருத்தமான தகுதி நிலைகளில் பணி நியமனம் செய்திடவும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி : மதுவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு இயக்கம் உருவாகியிருப்பதாகச் செய்தி வந்துள்ளதே?
பதில்: தமிழகத்தில் நடந்த மதுவுக்கு எதிரான அரசியல் போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் என்ற பெயரில், பஞ்சாப், ஆந்திரம், தெலுங்கானா உட்பட 18 மாநிலங்கள் ஒருங்கிணைந்து அரசியல் ரீதியாக மதுவுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகின்றன.
இந்த இயக்கத்துக்கு பீகார் முதல் அமைச்சர் நண்பர் திரு. நிதிஷ்குமார் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications