இன்னும் நான் அழுது கொண்டிருக்கிறேன்.. சேலத்தை நெகிழ வைத்த கருணாநிதி
சேலம்: வீரபாண்டியார் மறைந்தபோது நான் அழுததை யாரும் இன்னும் மறக்கவில்லை. எனக்கோ அந்த அழுகை இன்னும் நிற்கவில்லை என்று சேலம் பிரசாரக் கூட்டத்தின்போது திமுக தலைவர் கருணாநிதி கூறியபோது அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம் நாடாளமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திங்கள்கிழமை சேலம் வந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடனான நினைவுகளை உருக்கத்துடன் தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
வீரபாண்டியார் குறித்தும், சேலம் குறித்தும் அவர் பேசியதிலிருந்து...
எப்போதும் தனி உற்சாகம்
சேலத்துக்கு எப்போது வருவது என்றாலும் எனக்கு தனி உற்சாகம் இருக்கும், ஆனால், அந்த உற்சாகம் இந்த முறை இல்லாமல் போய்விட்டது. வீரபாண்டி ஆறுமுகம் இங்கு இல்லையே என்ற நினைவே என்னை உற்சாகம் இழக்கச் செய்துவிட்டது. அந்த வேதனையை ஓரளவு சமாளித்துக் கொண்டுதான் நான் இங்கு வந்துள்ளேன்.
வீரம் செறிந்த வீரபாண்டியார்
வீரபாண்டி ஆறுமுகத்தின் வீரம் செறிந்த முகத்தைக் காண முடியாவிட்டாலும், அவர் ஏற்படுத்திக் கொடுத்த அடையாளச் சின்னங்களை வரும் வழியில் நான் கண்டேன். இங்குள்ள திட்டப் பணிகள் யாவும் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆர்வத்தால், உள்ளத்தில் உதித்த சிந்தனையால் மக்களுக்குக் கிடைத்தவை. இவ்வளவும் தந்த ஆறுமுகம் இன்று இறந்துவிட்டார்.
ஓராயிரம் ஆறுமுகங்கள்
ஒரு ஆறுமுகம் இல்லையே என்ற கவலை இருந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆறுமுகங்கள் இங்கு இருக்கின்றனரே என்ற ஆறுதலை நான் பெறுகிறேன். அவர் இறந்தபோது என்னுடன் இருந்தவர்கள் நான் கதறி அழுததைக் கண்டனர். அந்த அழுகை எனக்கு இன்னும் நின்றபாடில்லை.
3 முறை சிறையில் அடைத்த தமிழக அரசு
தமிழக அரசு அவரை 2, 3 முறை சிறையில் அடைத்தது. சென்னை சிறையில் அவரை நான் சந்தித்துப் பேசியபோது என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கேட்காமல், சேலம் மாவட்ட மக்களுக்கான திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றனவே என்று மக்களுக்காகத்தான் கவலைப்பட்டார். அவர் இங்கு இல்லாவிட்டாலும் அவரது நட்பு, தோழமை, கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற சபதம் அழிந்துவிடவில்லை. என்றைக்கும் அழிந்துவிடாது.
கலை வாழ்க்கையில் கோவைக்கு அடுத்து சேலம்தான்
சேலத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு காலகாலமாக உள்ளது. எனது கலை வாழ்க்கையில் கோவைக்கு அடுத்த இடம் சேலத்துக்குதான் உள்ளது. சேலத்தில்தான் எனது கலை வாழ்க்கையை பிரபலமாக நடத்தினேன். மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆரை நான் தான் அறிமுகம் செய்தேன் என்றார் கருணாநிதி.