கருணாநிதி திங்கள் கிழமை வீடு திரும்புவார்- சத்யராஜ்; நலம் விசாரித்த நாசர்
திமுக தலைவர் கருணாநிதி திங்கட்கிழமையன்று வீடு திரும்புவார் என்று கனிமொழி கூறியதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: 93 வயதாகும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானதைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரானாலும் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவேரி மருத்துவமனையிலிருந்து உடல்நலம் தேறி, கடந்த 7ஆம் தேதியன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்துவந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு, 15-12-2016 அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மீண்டும், காவேரி மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் அவர்களை நேரில் பார்க்க வராமல் கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று திமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அதிமுக எம்.பி தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார், ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்து, கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ராஜ்யசபா எம்.பி கனிமொழியிடம் கேட்டறிந்ததாக கூறினார்.
கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் அவர் திங்கட்கிழமையன்று வீடு திரும்புவார் என்று கனிமொழி கூறியதாகவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications