ஒரே மேடையில் எதிர்க்கட்சி தலைவர்கள்.. லோக்சபா தேர்தலுக்கான அணி திரட்டலாக மாறுமா கருணாநிதி வைர விழா?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டசபை வைர விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதால் அரசியல் மாற்றத்திற்கு இந்த விழா அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார்.
மாற்றத்திற்கான விதை
இந்த பிறந்த நாள் விழாவுடன், கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவும் நடைபெற உள்ளது. எனவே அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்க வர உள்ளது அரசியல் மாற்றத்திற்கான விதையாக மாறும் என கருதப்படுகிறது.
காங்கிரஸ் வலு இல்லை
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்கொள்ள போதிய திறமை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் பலவும் அதை எதிரொலித்துவிட்டன. காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ராகுல் தலைமைக்கு எதிராக அவ்வப்போது பெரும் தலைவர்கள் முனுமுனுப்பை முன் வைக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் பலம்
இருப்பினும் காங்கிரஸ் தலைமைக்கு இப்போது வேறு யாரையும் நியமிக்க வாய்ப்பில்லை. அதேநேரம், மோடி அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக ஒரு அணி திரட்டல் காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. மத்தியில் இருப்பவர்கள் நல்லாட்சி தருகிறார்களோ, அல்லது மோசமான ஆட்சி தருகிறார்களோ, அதுவல்ல பிரச்சினை. எதிர்க்கட்சிகள் வலுவிழந்து இருப்பது இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டுக்கு ஆபத்தான நிலை என்பதுதான் நிதர்சனம்.
மாற்று சக்திகள் சங்கமம்
இந்த ஒரு குறைபாட்டை போக்க மாற்று சக்திகள் அணைத்தும் இணையும் மேடையாக கருணாநிதியின் வைர விழா மாறிப்போயுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
அணி திரட்டல்
பாஜக மற்றும் அதன் 'தோழமை' கட்சியான அதிமுகவுக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படவில்லை என்பதில் இருந்தே, எதிர்கட்சிகளின் அணி திரட்டலுக்கான விதை விழுந்துவிட்டது. இன்றைய விழா மேடையில் கண்டிப்பாக தலைவர்கள் இதை தங்கள் வார்த்தைகளால் முன்வைப்பார்கள். மாட்டிறைச்சி தடை நேரடியாக தென் மாநிலங்கள் மீது தொடுக்கப்பட்ட போராக பார்க்கப்படும் நிலையில், விழா மேடை அரசியல் மேடையாக மாறுவது உறுதி.
தமிழகத்தில் விதை
ஏற்கனவே திமுக தலைமையில், தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளில் பல அணி திரள தயாராகி உள்ளன. இந்த சூழலில் தேசிய அளவிலும் திமுக அரசியல் மாற்றத்திற்கான முக்கிய பங்காற்ற விழா மேடை பயன்படப்போகிறது. அடுத்த லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி விதை தமிழகத்தில் ஊன்றப்பட உள்ளது என்பதே எதிர்பார்ப்பு.