அடுத்து வருவது "அம்மா வெற்றிலை பாக்குக் கடை"... கருணாநிதி கிண்டல்!!
சென்னை: தமிழகத்தில் 100 இடங்களில் அம்மா வெற்றிலை-பாக்கு கடைகளைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம் என்று திமுக தலைவர் கருணாநிதி நக்கலடித்துள்ளார்.
அம்மா மருந்தகங்கள் குறித்த கேள்விக்குத்தான் இப்படி கிண்டலாக பதில் கொடுத்துள்ளார் கருணாநிதி.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை...
பொறியியல் கல்லூரியில் திருநங்கை
தமிழ்நாட்டில் ஒரு திருநங்கை முதன் முதலாக பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றிருக்கிறாரே?
கிரேஸ் பானுவுக்கு வாழ்த்துகள்
கிரேஸ் பானு என்ற திருநங்கை; பிளஸ்-2 படித்த நேரத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்டபோதிலும், பல சிரமங்களைக் கடந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியில் படிக்க தேர்வு பெற்றிருக்கிறார். பாராட்டுதற்குரிய செய்தி-கிரேஸ் பானுவுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.
அதிக விலை கொடுக்கப்படும் மின்சாரம்
குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை விலைக்கு வாங்காமல், அதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரத்தை வாங்குவதாக சொல்லப்படுகிறதே?
வாங்க மறுக்கும் மின்வாரியம்
தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.3.10க்கு வழங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழக மின்சார வாரியம், காற்றாலை மின்சாரத்தை வாங்க மறுத்து, எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.14 என்ற விலைக்கு வாங்குவதாக புகார் கூறப்படுகிறது.
126 கோடி இழப்பு
கடந்த 23 நாட்களில் மட்டும் இவ்வாறு எரிவாயு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் 126 கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆனால் மின்வாரியத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் சரியாக இல்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
அம்மா மருந்தகங்கள்
அதிமுக அரசு சார்பில் பத்து இடங்களில் அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே?
அடுத்து அம்மா வெற்றிலை பாக்குக் கடை...!
அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் "அம்மா வெற்றிலை-பாக்கு கடை"களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.