பண மோசடி, மிரட்டல் வழக்கு: கருணாநிதியின் மகள் செல்வி விடுவிப்பு
சென்னை: பண மோசடி, மிரட்டல் வழக்கில் இருந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2012ம் ஆண்டு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது மருமகன் டாக்டர் வி.எம்.ஜோதிமணி, செங்கல்பட்டு அருகே தாழம்பூர் கிராமத்தில் 2.94 ஏக்கர் நிலத்தின் பொது அதிகாரம் தன்னிடம் உள்ளதாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்யப்போவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த நிலத்தை ரூ.5.14 கோடிக்கு விலை பேசி, ரூ.3.50 கோடியை காசோலை மற்றும் ரொக்கமாக கடந்த 2007ம் ஆண்டு அவரிடம் கொடுத்தேன்.
பணத்தை வாங்கிக் கொண்டவர், அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இதையடுத்து அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். அவர் அந்த பணத்துக்கு வங்கி காசோலைகள் தந்தார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு பணத்தை கேட்டு சென்றபோது, ஜோதிமணியின் மாமியார் செல்வி என்னை மிரட்டினார். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில், கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் மீது, மோசடி மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றபத்திரிகையை பூந்தமல்லி கோர்ட்டில் கடந்த ஆண்டு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்ட செல்வி, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை, பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், செல்வி தாக்கல் செய்த மனுவில், கடந்த, 2011 செப்டம்பர் 20ம் தேதி காலை, 11 மணியளவில், என் வீட்டில் வைத்து, நெடுமாறனை நான் மிரட்டியதாக, புகாரில் கூறப்பட்டுள்ளது. புலன் விசாரணையின் போது, மாலை,5.30 மணிக்கு மிரட்டியதாக கூறியுள்ளார். இது, முன்னுக்குபின் முரணானது. அன்றைய தினம் காலையில், கொல்கத்தாவிற்கு விமானத்தில் சென்று, இரவில் தான் சென்னை திரும்பினேன்.
நெடுமாறன் குறிப்பிட்ட நேரத்தில், நான் சென்னையில் இல்லை. உண்மையை மறைத்து, இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. எனவே, பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். வழக்கில் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி சி.டி.செல்வம், பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கில் இருந்து, செல்வியை விடுவித்து உத்தரவிட்டார்.