கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் உடல் தகனம்! நல்லகண்ணு, வாசன், திருமா அஞ்சலி!!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சகோதரியும், முரசொலி மாறனின் தாயாருமான மறைந்த சண்முகசுந்தரத்தம்மாள் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் மூத்த சகோதரியான சண்முகசுந்தரத்தம்மாள் (வயது 99) முதுமையினால் நேற்று காலமானார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள முரசொலி செல்வம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். சகோதரி உடலை பார்த்து அவர் கண்கலங்கினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட தி.மு.க. நிர்வாகிகள், கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலர் முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் பிரபு, நடிகை குட்டி பத்மினி, ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா, நக்கீரன் கோபால், நக்கீரன் காமராஜ், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் உள்பட பலர் சண்முகசுந்தரத்தம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் சண்முக சுந்தரத்தம்மாள் உடல் பெசன்ட் நகர் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கருணாநிதி பங்கேற்றார். அவரது கண்கள் கலங்கியிருந்தது.
மு.க.ஸ்டாலின் உள்பட கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். ஊர்வலம் பெசன்ட் நகரை அடைந்ததும் அங்குள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.