வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்.. மறைந்தாலும் இப்படி மறைந்து போக வேண்டும்..!
கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியில் சில தருணங்கள்தான் இவை.
Recommended Video

சென்னை: ஒரு மனிதனின் நிறைவான வாழ்வு அவரது மரணத்தில் வெளிப்பட்டு போகும். அதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாறுகள் கோடிட்டு காட்டி இருக்கின்றன. ஆனால் இன்றைய தலைமுறைகளுக்கு கண்கூடாக அதனை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்தான்.
மாறுபட்ட களங்கள், எத்தனையோ மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்கள், மாறுபட்ட கோணங்கள் நிறைந்ததுதான் தமிழக அரசியல். ஆனால் கருணாநிதி என்று வந்துவிட்டால், அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு உரிய மரியாதை அளித்த பாங்கு மதிக்கத்தக்கது, போற்றத்தக்கது. அத்தகைய சில நெகிழச்சி தருணங்களையும், வியக்க வைத்த சம்பவங்களையும்தான் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

டிடிவியின் முதல் அஞ்சலி
யார் வந்தாங்களோ இல்லையோ, ராஜாஜி மண்டபத்தில் பல மணி நேரம் காத்திருந்து அரசியலில் முதல் ஆளாக கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது டிடிவி தினகரன்தான். மூத்த தலைவரின் மீதுள்ள மரியாதையும், தன் அக்கா சசிகலாவுக்கு திருமணம் செய்து வைத்த நல்லுள்ளம் என்ற காரணமாககூட இருக்கலாம். அவருடன் கூடவே அவரது ஆதரவாளர்கள் பி.வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

ரஜினியின் மதிக்கும் பாங்கு
மரியாதை மிக்க தலைவர்கள் இருந்தால் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திவிட்டு வருவது ரஜினிகாந்த்துக்குரிய குணமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம், 45-வருடத்திற்கும் மேலாக தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வருவதும், அரசியல் தலைவர்களை மதித்து வரும் பாங்கும்தான். அது கலையுலகம் என்றில்லை, அரசியல் உலகம், இலக்கிய உலகமானாலும் குடும்பத்தாருடன் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

கனத்த இதயத்துடன் தொண்டர்கள்
பொதுமக்கள் சொல்லவே தேவையில்லை. எங்கு பார்த்தாலும் கருப்பு ஆடைகள்தான். கையிலே உதய சூரியன் சின்னங்களையும், கருணாநிதியின் சாதனை பட்டியல் அடங்கிய பதாகைகளையும் உயர்த்தி பிடித்து மெல்ல மெல்ல ஊர்ந்து வந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து பல மணி நேரம் காத்து கிடந்த சமயத்தில் கருணாநிதி முகம் தெரிந்தவுடன் உணர்ச்சி வசப்பட்டனர். முகம் சரியாகவும், தெளிவாகவும் கூட தெரியவில்லை. ஆனாலும் இரு கரம் கூப்பி வணங்கி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய முழக்கமிட்டனர். தாங்கள் கொண்டு ரோஜா மலர்களை கருணாநிதி சவப்பெட்டியின் மீது தூவியடித்த போதெல்லாம் இதயம் கனத்து போயினர்.

நான் யார் தெரியுமா?
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கொஞ்சம் பரபரப்பாக்கி விட்டவர் டி.ராஜேந்தர்தான். "அஞ்சலி செலுத்த வந்தால் என்னையா தடுத்து நிறுத்துகிறீர்கள்? நான் யார்? பரம்பரை தி.மு.க-காரன் தெரியுமா? கலைஞரை எனது தலைவராக ஏற்றுக்கொண்டவன். என் தலைவரோட முகத்தை பார்க்க வந்தேன். காவல்துறை எனக்கு இவ்வளவு தடையா போட வேண்டும்? திமுகவின் கொள்கை பிரச்சார பீரங்கி என்று கலைஞரால் அழைக்கப்பட்டவன், எனக்கே இந்த கதியா. என் தலைவனுக்காக எத்தனை கிலோமீட்டர் வேண்டுமானால் நடப்பேன். என்னை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீர்களே இது என்ன நியாயம்? திரையில் தான் நடிப்பேன். தரையில் நடிக்க மாட்டேன். என்னை எப்படி எல்லாம் வளர்த்தார் அவர் தெரியுமா? எப்படி எல்லாம் ஆளாக்கினார்? அவர் எனக்கு தகப்பன் மாதிரி. அவருக்கு நான் பெத்த பிள்ளை இல்லை. தத்துப்பிள்ளை.'' இப்படி உணர்ச்சிவசப்பட்டார் டி.ஆர்.

பீறிட்டு வெடித்த வைரமுத்து
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியின் உச்சமே வைரமுத்துதான். கருணாநிதி-வைரமுத்து உறவை என்ன சொல்வது? தந்தை-மகன்? ஆசான்-மாணவன்? எந்த வரிசையில் இதை சேர்க்க? பொதுவாக வைரமுத்து அனைவத்து வகையிலும் பண்பட்டிருந்தாலும், பாசம் என்று வந்துவிட்டால் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சிவாஜி கணேசனை மின்மயானத்தில் தகனம் செய்யும்போது கதறியபோதுதான் வைரமுத்துவின் உணர்வு எவ்வளவு மென்மையானது என்று தெரியவந்தது. நேற்று கருணாநிதியின் உடலை பார்த்ததும், வைரமுத்து கதறி வெடித்து அழுதது உருக்கத்தின் மொத்த வெளிப்பாடாக பீறிட்டு வந்தது.

துக்கத்திலும் ஒரு துள்ளல்
துக்க வீட்டில் சந்தோஷம் வருமா? துயர நிகழ்ச்சியில் மகிழ்ச்சி பெருக்கெடுக்குமா? ஆமாம். அவை நடந்ததே. எப்போது தெரியுமா? கருணாநிதியை நல்லடக்கம் செய்ய அண்ணா சமாதியில் இடம் வழங்கப்பட்டு விட்டது என்று அதற்கான உத்தரவினை மா.சுப்பிரமணியம் அறிவித்தாரே அப்போதுதான். கண்ணீரும் துயரமுமாக கிடந்த தொண்டர்கள் ஒரு கணம் துள்ளினார்கள்... சந்தோஷம் மின்னல்போல் எட்டிப்பார்த்தது... ஒரு கணம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று வந்துவிட்டனர். அந்த சந்தோஷம் ஒரு நிமிடமே ஆனாலும் 'கலைஞர் புகழ் வாழ்க' என கோஷம் எழுப்ப தொண்டர்கள் தவறவில்லை.

அடையாளத்தின் பதிப்பு
இறப்பு இயற்கையானதுதான்... அனைவருக்குமானதுதான்... ஆனால் மனிதனாக பிறந்தால் சாங்கியம், கடமைக்காக வாழாமல், தன் அடையாளத்தை பதித்து விட்டு செல்ல வேண்டும் என்று உதாரணத்தை காட்டி விட்டு போயிருக்கிறார் கருணாநிதி. அனைவர் மனதிலும் நீக்கமறவும், ஒரு தாக்கத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் கருணாநிதி. இது இந்த நூற்றாண்டில் கருணாநிதியை தவிர இனி வேறு யாருக்காவது கிடைக்குமா? நடக்குமா? சாத்தியமா? என்பது பல நூறு கேள்விக்குறியே!!!!












Click it and Unblock the Notifications