திமுகவை நேரடியாக தாக்க திராணி இல்லாமல் ஸ்டாலினை பழிக்கிறார்கள்: கருணாநிதி விளாசல்
சென்னை: திமுகவை நேரடியாகத் தாக்குவதற்குத் திராணி இல்லாத காரணத்தால் சிலர் என்னைத் தூக்கிப் பேசியும், எழுதியும், அதே நேரத்தில் என் தலைமையிலே உள்ள ஸ்டாலின் போன்றவர்களை இழித்தும், பழித்தும் கேலி செய்தும், கிண்டல் புரிந்தும் வருகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதும்; அதைக் கண்டு எதிரிகளை விட நம்மிடையே இருக்கின்ற ஒரு சில நண்பர்கள் எனப்படுவோர் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
திமுகவை இந்தத் தேர்தலோடு ஒழித்துக் கட்டிவிடலாம் என்று கனவு கண்ட அவர்களிடையே, அடுத்து காண இருக்கின்ற களங்களுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் இந்தச் சூழலில், இந்தக் கருத்து விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தருகிறேன். ஏதோ இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு திமுகவின் வரலாறு முடிந்துவிட்டது என்பதைப் போலவும், அடுத்து திமுக எழவே எழாது, எழுந்து நடக்கவே செய்யாது என்ற நினைப்புடனும் திமுகவை இப்போதும் விடாமல் விமர்சித்து வருகிறார்கள்.