திமுகவை வீழ்த்த எண்ணி வீசிய வலைகள் எல்லாம் அறுந்து தூள் தூளாகப் போய்விட்டன
குறிப்பாக அப்படி விமர்சிப்பவர்கள் என்னைத் தாக்கிப் பேசியும் எழுதியும் நம்முடைய உயிரனைய தம்பிமார்களையும், உழைத்து இந்தக் கழகம் வளர்த்த தளபதிகளையும்; இழித்தும் பழித்தும், மக்கள் மன்றத்தில் அவர்களைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியும், பிரசாரம் செய்வதில் இருந்தே அவர்களை திமுக தொண்டர்களிடம் இருந்து பிரித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்வேன். தயவு செய்து திமுக வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். அதை எத்தனை எத்தனையோ வம்பர்களும், வஞ்சகர்களும் வீழ்த்த எண்ணி வீசிய வலைகள் எல்லாம் அறுந்து தூள் தூளாகப் போய்விட்டன என்பதை இந்த நாடு உணரும், நாமும் உணர்வோம். எதிரிகள் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார்கள்.
திமுகவை நேரடியாகத் தாக்குவதற்குத் திராணி இல்லாத காரணத்தால்; முதற் கட்டமாக என்னைத் தூக்கிப் பேசியும், எழுதியும், அதே நேரத்தில் என் தலைமையிலே உள்ள ஸ்டாலின் போன்றவர்களை இழித்தும், பழித்தும் கேலி செய்தும், கிண்டல் புரிந்தும், மனத்தளர்ச்சி அடையச் செய்து, அடுத்த கட்டமாக அவர்களையும் வீழ்த்திவிட்டால், பின்னர் பூண்டற்றுப் போய்விடும் இந்தக் கழகம் என மனப்பால் குடிக்கின்ற காரணத்தால், ஒரே கட்டுரையில் என்னைப் புகழ்ந்தும், போற்றியும், என்னால்தான் இந்தக் கழகத்தைக் காத்திட முடியும் என்று துதி பாடியும், அதைத் தொடர்ந்து அதே கட்டுரையில், அடுத்த வரியிலேயே கழகத்தில் தலை எடுக்கக் கூடிய ஸ்டாலின் போன்றவர்களை கேலியும், கிண்டலும் செய்தும் எழுதுகிறார்கள்.
என்னைப் பற்றிப் புகழ்ந்து எழுதினால் சிலருக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்படும் என்றும், அந்த மகிழ்ச்சி மறைவதற்குள்ளாகவே ஸ்டாலின் போன்றவர்களைத் தாக்கியும், கேலி செய்தும் அவர்கள் கட்சியை நடத்துவதற்கே தகுதியற்றவர்கள் என்பது போல விமர்சித்தும் கட்டுரைகள் தீட்டுகிறார்கள். அவர்கள் போடும் கணக்கு என்ன தெரியுமா? எல்லோரும் சேர்ந்து தலைவரை ஏற்கனவே இருந்ததைவிட ஓரளவு வீழ்த்தி விட்டோம்; அடுத்துப் பாடுபடுகிற மு.க.ஸ்டாலின் போன்றவர்களையும் வீழ்த்துவதற்கு இதுதான் தக்க தருணம் என்று நம்புகிறார்கள் போலும்.