சிரிப்புக்கே புகழ் பெற்றவர் மறைந்து விட்டார்- குமரிமுத்து மறைவிற்கு கருணாநிதி, ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடியில் கோலோச்சிய நடிகர் குமரிமுத்து இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, ''திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலை வரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரி முத்து அவர்கள் இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து, மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார்.

இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் "கலைமாமணி", "கலைச்செல்வம்", ஆகிய விருதுகளைப் பெற்றவர். பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு "பெரியார் விருது" வழங்கி கௌரவித்துள்ளது. குமரி முத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூலில், ''கலையுலகில் கழகத்தின் கொள்கை முழக்கமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கே.வைப் போலவே குமரி மாவட்டத்திலிருந்து கலைத்துறைக்கு வந்த குமரி முத்து அவர்களும் கலைவாணர் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கியவர். தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதிமிக்க தி.மு.க.காரராக வாழ்ந்தவர்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications