தாயார் அஞ்சுகம் நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி
திருவாரூர்: திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக காட்டூரில் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சனிக்கிழமையன்று சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி திருவாரூருக்கு சென்று சன்னதி தெருவில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கினார்.
இன்று காலையில் காட்டூரில் உள்ள அவருடைய தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு கருணாநிதி சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் 12.50 மணி அளவில் திருவாரூர் உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம், கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் மாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். கருணாநிதி சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் தாயார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர்தான் அடுத்த பணிகளை கவனிப்பார்.
கடந்த முறை வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் தாயாரை வணங்கிய பின்னரே வேட்புமனுவை தாக்கல் செய்தார். இம்முறையும் அதே சென்டிமெண்ட் படி தாயார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னரே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications