மீண்டும் 'விடுதலை' கோஷம்... பிரிவினைவாத இயக்கமாக எங்களை அடக்க நினைத்தால்... கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: மத்திய அரசு மாநிலங்களை ஒடுக்க நினைத்தால் மீண்டும் 'விடுதலை' கோஷத்தை எழுப்புவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

ராமானுஜர் இதற்குதான்..
அரசியலில் நீங்கள் துறக்க வேண்டியது தங்களுடைய சுயநலத்தை தான். அப்போது தான் சாதி, மத, பேதம் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ராமானுஜர் கதையை உருவாக்க என்ன காரணம்? என்று பலரும் திகைக்கிறார்கள். ஏற்கனவே பாரதிதாசன் எழுதி, படித்த கதைதான். கடவுளை வைத்து மக்களை பேத படுத்துகிறவர்களை பாரதிதாசன் சாடினார். அவர் வழியில் தி.மு.க.வும் பாடுபட்டு வருகிறது. தமிழை பரப்புவதற்கு தான் ராமானுஜம் வந்திருக்கிறார்.

விடுதலை கோஷம்
மத்திய அரசு எங்களை மதித்தால், மதிக்கிற வகையில் அடங்கி போவோம். இமயம் முதல் கன்னியாகுமரி வரை நாங்கள் தான் ஆள பிறந்தவர்கள் என்றால், நாங்கள் மீண்டும் விடுதலை கோஷத்தை எழுப்புவோம்.

பிரிவினைவாத இயக்கம்
எங்களை பிரிவினைவாத இயக்கம் என்று கருதி அடக்க நாங்கள் தயார் என்று யாராவது தமிழகத்தில் அரசியல் நடத்த முன்வந்தால், அவர்களால் வடமாநிலங்களில் கூட ஆட்சி நடத்த முடியாது. மனிதர்களை மனிதராக யார் நடத்த மறுத்தாலும், அவர்களை வீழ்த்துவோம்.

பதிலடி கொடுப்போம்
எந்த மொழியாலும், எங்களை தாக்கி அழிக்க முடியாது. நம்முடைய வெற்றி பாதையில் யார் குறுக்கிட்டாலும் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications