இலங்கைக்கு ஆதரவான யு.எஸ். தீர்மானத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்தால் வரலாறு மன்னிக்காது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்தால் வரலாறு மன்னிக்காது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 14-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளார். இந்த பயணத்தை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பிய விரிவான கடிதம்:

Karunanidhi warns India on US support to Sri Lankan probe into war

அன்பார்ந்த பிரதமர் அவர்களுக்கு,

தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்கள் அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன். இந்த மாத மத்தியில் திரு. ரணில் விக்ரம சிங்கே அவர்களும், அக்டோபர் மாதத்தில் இலங்கை அதிபர் திரு. மைத்திரிபால சிறீசேனா அவர்களும் டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், மிகத் தொன்மைக் காலம் முதல் இலங்கை நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர் களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண வேண்டுமென்று 1956ஆம் ஆண்டிலிருந்தே குரல் கொடுத்து வருவதை தாங்கள் அறிவீர்கள். எனவே இலங்கைத் தமிழர்களுடைய மனக் குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.

13-2-2015 அன்று தங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்கு தங்களுடைய அன்பான கவனத்தை ஈர்த்திட விரும்புகிறேன். அதில் பின்வருமாறு நான் விளக்கி யிருக்கிறேன் :

"இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே திரு. சிறீசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே திரு சிறீசேனா அவர்களுக்கு விரும்பி வாக்களித்தார்கள். தேர்தலின் போது திரு. சிறீசேனா அவர்களும், அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளை தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரும், சிங்களர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும்,

சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்."

இலங்கை அதிபராக திரு. சிறீசேனா பதவிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட பிறகும், அவர் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று வதில் மிகச் சிறிய முன்னேற்றம் அல்லது முன்னேற்றமே இல்லை என்கிற அளவுக்குத் தான் நிலைமை நீடித்து வருகிறது. சிங்களத் தலைவர்களால் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருப்பது தமிழர்களைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் கடந்த நூறாண்டு காலத்தில் தமிழர்களோடு சிங்களவர்கள் செய்து கொண்ட 14 ஒப்பந்தங்கள் எப்படியெல்லாம் நிறைவேற்றப்படவில்லை, எப்படியெல்லாம் ஒப்பந்தங்களுக்கு மாறாக நிகழ்வுகள் நடந்தன என்பதைப் பற்றி கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறார்.

நான்காவது முறையாக இலங்கைப் பிரதமராகப் பொறுப்பேற்ற வுடனே திரு. ரணில் விக்ரமசிங்கே கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது "விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தற்போது தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஏற்படும் உகந்த சூழ்நிலை உருவாகியுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார். பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு மறுநாள், திரு. ரணில் பேட்டியளித்தார். (தி இந்து, ஆங்கில நாளேட்டின் முன்னாள் முதன்மை ஆசிரியர், திரு.ராம் அவர்களுக்கு அளித்த பேட்டி) அந்தப் பேட்டி விவரங்கள் 24-8-2015 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

திரு. ரணில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றித் தன்னுடைய கருத்துகளை அந்தப் பேட்டி யிலே வெளியிட்டிருக்கிறார்.

அ) மாகாணக் கவுன்சில்கள் உண்மையிலேயே நல்ல பணி ஆற்றுவதற்கான வழிவகைகள்; ஆ) மாகாணக் கவுன்சில்களுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள அதிகாரங்கள், மற்றும் இரண்டுக்கும் இணைந்து இருக்கும் அதிகாரங்கள் இ) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உண்மையான பிரச்சினை யாதெனில், தங்களுடைய நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பின் மூலமாக அகற்றப்பட்ட தமிழர்களை மீள் குடியிருப்பின் மூலம் அமர்த்துவது தான். ஈ) சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மாகாணக் கவுன்சில்களுக்குத் தலையிடும் உரிமை; உ) இந்திய நாடும் ஏற்றுக் கொண்ட 13வது அரசியல் சட்டத் திருத்தம்; ஊ) இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு உள்நாட்டு விசாரணை நடத்துதல் போன்ற பல்வேறு கருத்துகளை திரு. ரணில் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக திரு. ரணில் அவர்கள் வழங்கியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும். 2002ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக இருந்த போது திரு. ரணில் விக்ரம சிங்கே நார்வே நாட்டு ஆஸ்லோ நகரில், விடுதலைப் புலி களுடனான பேச்சு வார்த்தை முடிவில், ஒன்றுபட்ட இலங்கை நாட்டில் சிங்களர்களுக்கு என்று ஒரு மாநிலமும், தமிழர்களுக்கு என்று மற்றொரு மாநிலமும் ஆக இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதை உலகத் தமிழர்கள் மறந்து விடவில்லை.

உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை, அவர்களே தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, ஐ.நா. மேற் பார்வையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தப்பட வேண்டுமென்பதே திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடாகும்.

இவ்வகையான அரசியல் தீர்வு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

இலங்கைக் கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள் தொடர்ந்து நீடித்து வரும் கொடுமையைத் தாங்கள் அறிவீர்கள். தாங்கள் இலங்கைப் பிரதமரோடும், இலங்கை அதிபரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினை ஏற்படுத்தி னால் நான் தங்களுக்குப் பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்.

திரு மகிந்த ராஜபக்ச, இலங்கை அதிபராக இருந்த போது, சுதந்திரமான, சர்வ தேச விசாரணை வேண்டும் என்று மேற்கொண்ட நிலைப் பாட்டுக்கு முற்றிலும் மாறாக, தற்போது ஐக்கிய அமெரிக்கா, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீது விசாரணை மேற்கொள்வது தொடர்பாக புதிய திருத்தப்பட்ட தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வர விருப்பதாக பரவலாகச் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன.

அமெரிக்காவினுடைய திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தேடுவதில் திரு. ரணில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்திலே உள்ள நாங்களும், உலகத் தமிழர்களும் கேடு விளைவிக்கும் அமெரிக்க நாட்டின் இந்தத் தீர்மானத்தை முற்றாக எதிர்க்கிறோம். அமெரிக்காவும், இலங்கையும் மேற்கொள்ளும் இத்தகைய தந்திரத் திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்குமானால், வரலாறு மன்னிக்காது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கருத்திலே கொண்டு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடு நிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உலகச் சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த மாபெரும் தேசிய இனம் ஒன்றுக்கு நேர்ந்த சுய மரியாதையற்றதும், கண்ணியக் குறைவானதுமான நிகழ்வுகள் அனைத்தையும் துடைத் தெறிய கருணையுடன் கூடிய ஆக்கப் பூர்வமான அணுகுமுறையினை தாங்கள் மேற் கொள்ள வேண்டுமென்று இங்குள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றி யுணர்வோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள். தாங்கள் இலங்கை அதிபரோடும், இலங்கைப் பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் ஊக்கம் அளித்திடும் விளைவுகளுக்கு வித்திடும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+