அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது!- குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிஎன் அண்ணா துரைக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டும் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பிரதமர் நரேந்திர மோடிக்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியப் பேரரசின் 'பாரத் ரத்னா' விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டுமென்று குடியரசு தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் இன்று வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
அந்தக் கடிதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், மிகப் பெரிய சமூக சீர்திருத்த வாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற் பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு "பாரத ரத்னா" விருது வழங்குவது பொருத்தமாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.