நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை தேவை: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:
ரயில்வேயை மேம்படுத்துவதற்கு தாங்கள் எடுத்து வரும் முயற்சி பாராட்டத்தக்கது. முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துகள். தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிதி பற்றாக்குறை, ஒப்பந்தம் விடுவதில் எழும் பிரச்னை, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் போன்றவற்றால் தடைபடுகின்றன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றே நம்புகிறேன்.

சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை 3-ஆவது தடம், சென்னை சென்ட்ரல்- பேசின் பிரிட்ஜ் 5 மற்றும் 6-ஆவது தடம், அத்திப்பட்டு-புதூருக்கு 88.3 கிமீ வழித்தடம், சென்னை கடற்கரை- அத்திப்பட்டு 4-ஆவது தடம் அமைக்கும் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையிலும் துவங்கப்பட்ட இந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
கும்பகோணம்-திருவாரூர், ஓமலூர்-மேட்டூர் அணை, ஈரோடு-பழனி, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, மதுரை-தூத்துக்குடி வழியாக அருப்புக்கோட்டை, பெங்களூரு-சத்தியமங்கலம், திண்டிவனம்-திருவண்ணாமலை, மதுரை-போடிநாயக்கனூர், சென்னை-கடலூர் வழியாக மாமல்லபுரம் மற்றும் திண்டிவனம்-நகரி ஆகிய வழித்தட திட்டங்கள் 1996-1999-ஆம் ஆண்டு காலகட்டங்களில் அறிவிக்கப்பட்டன.
இந்தத் திட்டங்களுக்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications