ரஸ்தாலி 400.. மொந்தன் 800.. தலையை சுற்ற வைக்கும் வாழைத்தார் விலை!
கரூர்: கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் ரயில் நிலையம் அருகில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் லாலாபேட்டை பகுதிகளில் வாழைக்காய் கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் கரூர் மாவட்டத்தில் கரூர், சித்தலவாய், பிள்ளபாளையம், லாலாபேட்டை, மகாதானபுரம், கள்ளபள்ளி, குளித்தலை ஆகிய பகுதிகளிலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாழைக்காய் விவசாயம் கொடிகட்டிபறக்கிறது. மேலும் இந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு விவசாயம் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைத்தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேஷம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ரூ 500 க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ400 க்கும் கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ 500 க்கும் மொந்தன் வாழைத்தார் ரூ 800 க்கும் வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.
தற்போது பூவன் வாழைத்தார் ரூ 300 க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ 200 க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ 500 க்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.. வாழைத்தார் வரத்து அதிகரிப்பின் காரணமாகவும், வாழைக்காய் விற்பனைக்கான சீசன் இல்லாததாலும், வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது போன்ற காலங்களில் விவசாயிகளின் விவசாயம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு வாழைத்தார்களை பாதுக்காப்பாக வைப்பதற்கு குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து பாதுகாப்பான வாழை கிடங்குகள் அமைத்து விவசாயிகளின் நஷ்டங்களை சரிகட்டி வாழ வழி செய்ய வேண்டும் என இப்பகுதிகள் வாழும் வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட நாட்களாகவே வாழை விவசாயத்தை பாதுகாக்கும் வாழைத்தார்களை குளிரூட்டும் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி அரசியல் வாதிகள் தேர்தல் வரும் போது மட்டுமே வாக்குறுதியாக கொடுக்கும் நேரத்தில், இந்த வாழை இழப்பினை அரசுக்கு தெரிவிக்கும் பொருட்டு இந்த தேர்தலை புறக்கணிக்கவும் வாழை விவசாயிகள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்த விவசாயிகளின் மனநிலையை மாற்ற அ.தி.மு.க புள்ளிகள் எதாவது திட்டம் தீட்டுவார்களா ? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்