கரூரில் மொத்தம் 3 சின்னச்சாமி.. யார் செஞ்ச சதி சாமி...?
கரூர்: கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னச்சாமிக்குப் போட்டியாக மேலும் 2 சின்னச்சாமிகள் களத்தில் குதித்துள்ளனர். இது அதிமுகவின் சதி வேலையாக திமுகவினரால் பார்க்கப்படுகிறது.
நடைபெற உள்ள 16 வது மக்களவை தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் டாக்டர் மு.தம்பித்துரை, தி.மு.க சார்பில் ம.சின்னசாமி, தே.மு.தி.க சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி உள்ளிட்ட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தி.மு.க சார்பில் போட்டியிடும் சின்னசாமி பெயரில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் உள்ளனர் என்பது தான்.
திமுக சின்னச்சாமி...
தி.மு.க சார்பில் போட்டியிடும் ம.சின்னசாமி த/பெ மலையண்ணக் கவுண்டர், கோதை நகர், என்.எஸ்.எஸ்.கிராமம், கரூர் என்பது இவரது முகவரியாகும்.
இன்னொரு சின்னச்சாமி
மற்றொரு சின்னசாமி கரூர் அருகே உள்ள மண்மங்கலம் தாலுக்கா ராமேஷ்வரப்பட்டி பகுதியை சார்ந்த மாரப்பகவுண்டர் மகன் ம.சின்னசாமி (வயது 50) ஆவார்.
மற்றொரு சின்னச்சாமி
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா, கருப்பூர் அருகே உள்ள வைரக்கவுண்டன்பட்டி பகுதியை சார்ந்த வெள்ளக்கவுண்டர் மகன் சின்னசாமி (வயது 61).
அதிமுக நோட்டரியின் அட்டஸ்டெஷன்
இதில் தி.மு.க வேட்பாளர் சின்னசாமியை தவிர மற்ற இரண்டு சின்னசாமிகளுக்கும் நோட்டரி பப்ளிக் அ.தி.மு.க வழக்கறிஞர் முகமது யூசுப் கையழுத்தும், முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. மேலும் முகமது யூசுப் அ.தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகி ஆவார்.
செந்தில் பாலாஜி ஊர்க்காரராமே...
மற்றொரு விஷயம் என்னவென்றால் மாரப்பகவுண்டர் மகன் சின்னசாமியின் சொந்த ஊர் ரமேஷ்வரப்பட்டி. இது கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த ஊராகும் என்பது தான்.
திமுக சின்னச்சாமியை சிதறடிக்க
தி.மு.க சார்பில் போட்ட்டியிடும் சின்னசாமியின் ஓட்டுகளை சிதறடிப்பதற்காக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி ஏதாவது சூழ்ச்சி செய்கிறாரா? என்பது தி.மு.க தரப்பின் சந்தேகமாகும்.
தேர்தல்னா நாலு பேர் போட்டியிடுவதும் அவர்கள் பெயரில் நாற்பது பேர் நிறுத்தப்படுவதும் சகம்ஜம்தானே...