லீவே தராத உயரதிகாரிகள்... ஆயுதப்படை போலீஸ்காரர் ‘ஆல் அவுட்’ குடித்து தற்கொலை முயற்சி
கரூர்: உயரதிகாரிகள் விடுமுறை தராமல் பணி புரியச் செய்ததால் மனமுடைந்த கரூர் ஆயுதப் படை போலீஸ்காரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ஆயுதபடையில் பணிபுரிந்து வருபவர் காவலர் மகேந்திரன். இவர் இன்று காலை தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு கரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘விடுமுறையே தராமல் தொடர்ந்து பணியில் தொடர செய்வதாக' உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பசுபதி பாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் தொல்லையால் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.