ஆமை வேக பணிகள்.. எப்ப வரும் மாவட்ட விளையாட்டு மைதானம்? காத்திருக்கும் கரூர்
கரூர்: கரூரில் ஆமை வேகத்தில் நடைபெற்றும் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டு விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கரூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் விளையாட்டு பயிற்சிக்கென எந்த கட்டமைப்பு வசதியும் இல்லாத கால கட்டத்திலேயே, கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சையது அஹமது இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அதே போல, ஆசிய உயரம் தாண்டுதல் போட்டியில், சாதனை படைத்த அண்ணாவியும் கரூரை சேர்ந்தவரே. இவர்கள் மட்டுமின்றி தென்னக ரயில்வே அணி கபடி வீரர் ராஜேந்திரன் மற்றும் தேசிய கூடைப்பந்து அணி முன்னாள் துணை கேப்டன் தியானேஸ்வரன் ஆகியோரும் கரூரில் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களே.

கைவிடப்பட்ட மாவட்ட மைதானம்
ஆனால், கரூரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மாவட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டாக அரசும், அரசு அதிகாரிகளும் கருதியதால் இன்று வரை யார் கவனிப்பும் இன்றி அனாதையாக உள்ளது.

திருச்சியில்தான் பல துறைகள்...
திருச்சி மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக கடந்த 1995ம் வருடம் கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது முதல் மாவட்ட தலைநகருக்கு தேவையான அனைத்து துறைகளும், கட்டமைப்புகளும் ஒவ்வொன்றாக நடைபெற்றது. ஆனால், பல விஷயங்களில் மாவட்ட அந்தஸ்தை கரூர் முழுமையாக பெறவில்லை. இன்றும்கூட அரசின் பல துறைகளின் தலைமை அலுவலகம் திருச்சியில் தான் இயங்கி வருகின்றது.

60 பேர் குழு
கரூரில் விளையாட்டு மைதானம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள், சேவை நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள் என 60 பேர் அடங்கிய குழு ஒன்று கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 2005 ம் வருடம் அமைக்கப்பட்டது.

ஒரு முன்னேற்றமும் இல்லையே..
இக் குழுவில் அவ்வப்போது உறுப்பினர் மாற்றுவது மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஆனால், விளையாட்டு மைதானம் கட்டுமான நடவடிக்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

பூமிபூஜை போட்ட ஆட்சியர்
கடந்த 2006 ம் ஆண்டு கரூர் ஆட்சியராக இருந்த கார்த்திக்-ன் பெரும் முயற்சியில், கரூர் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே 15.15 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு அன்று 82.84 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த திட்டத்திற்கு ரூபாய் 1.43 கோடி என மதிப்ப்பட்டுள்ளது.

பங்கு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இத் திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிட மையம் மூலம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. திட்டச் செலவில் 50 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு மற்றும் 25 சதவீதம் விளையாட்டு அரங்க குழு ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

மைதானங்கள்..
எட்டு அடுக்கு 400 மீட்டர் தடகளம், கால்பந்து, ஹாக்கி மைதானம், வாலிபால், கூடைபந்து மைதானம், நீளம் தாண்டும் மைதானம், சிறகு பந்து, கபடி, கோகோ மைதானம் மற்றும் பூப்பந்து மைதானம் என ஆடுகளங்கள் திட்டமிடப்பட்டது. மேலும் உள்விளையாட்டு அரங்கம், ஓய்வு அறை, கழிப்பறைகள் என அனைத்து வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பணி துவங்கி 5 ஆண்டுகளாகியும் முழுமை பெறவில்லை.

ஆமை வேகத்தில்..
மேலும், விளையாட்டு அரங்கு பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இதை அரசு அதிகாரிகள் தான் சரியான நேரத்தில் கவனித்து அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் செயல்பாடுகள் அது போல் தெரியவில்லை. மாதம் மாதம் சம்பளம் கி்டைத்தால் மட்டும் போது என்று தான் செயல்படுகின்றனர் என பொது மக்கள் மத்தியில் எண்ணத்தை விதைத்துவிட்டனர். இந்த அவல நிலை மாற வேண்டும். எனவே, இனியாவது தமிழக அரசு மவுனம் கலைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதுடன், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்பதுதான் கரூர் மாவட்ட மக்களின் கோரிக்கை.. .












Click it and Unblock the Notifications