சென்னையை ஸ்தம்பிக்க வைத்த கத்திப்பாரா போராட்டம்- கவுதமன் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை
சென்னை கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராடிய இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 6 பேரை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட மாணவர் அமைப்பினரை 6 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரையும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக போராடி வருகின்றனர். உச்சக்கட்டமாக நிர்வாண போராட்டம் கூட நடத்தி விட்டனர்.
வறட்சி நிவாரண நிதி அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மத்திய வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சந்தித்தால் மட்டுமே டெல்லியில் இருந்து கிளம்புவோம் என்றும் கூறி போராடி வருகின்றனர்.

கத்திப்பாராவிற்கு பூட்டு
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் அமைப்பினர் திடீரென போராடினர். கிண்டியில் உள்ள கத்திப்பாரா பாலத்திற்கு திடீரென பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்தம்பித்த சென்னை
திடீர் போராட்டத்தினால் சென்னையே ஸ்தம்பித்தது. மிக முக்கிய மேம்பாலமான கத்திப்பாரா மேம்பாலாத்தில் எந்தப்பக்கமும் வாகனங்கள் நகரமுடியாமல் தடுமாறின. விமான நிலையம் செல்பவர்களும், பணிக்கு செல்பவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

உடைத்த போலீஸ்
இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ், வேறு வழியின்றி கம்பியை அறுத்து உடைத்தனர். வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தினர். இதனையடுத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக கைது
சாலையில் அமர்ந்து போராடியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் பேச்சை கேட்க போராட்டக்காரர்கள் மறுக்கவே, உடனடியாக அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். சாலையில் அமர்ந்தவர்களை இழுத்துச் சென்றும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்தனர். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தினார் சென்னையே கிட்டத்தட்ட ஸ்தம்பித்தது என்றுதான் கூற வேண்டும்.

சிறையில் அடைப்பு
கவுதமனுடன் கைது செய்யப்பட்ட 6 பேரில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். அவர்கள் மீது பொதுமக்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், இடையூறு செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பரிவு செய்த போலீசார் மாலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கவுதமன் உள்ளிட்ட அனைவரையும் 27ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications