ஓஎன்ஜிசியே வெளியேறு... கதிராமங்கலம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: கச்சா எண்ணெய் குழாய் பதித்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கதிராமங்கலம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மற்றும் சுற்று வட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர் போராட்டம்
அய்யனார் திடலில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர் பொதுமக்கள். இந்நிலையில் நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் வேளையில், இப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தை கூட்டினர். அதில் கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

வெளியேறுக
ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் ஒட்டுமொத்த நீர் வளம், நில வளம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை மூடிவிட்டு உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும்.

ஆழ்துளை கிணறுகள் கூடாது
கதிராமங்கலம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாய தேவைக்காகவும், குடிநீர் தேவைக்காகவும், மழை நீர் செறிவூட்டவும் மட்டுமே ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். வேறு எதற்காகவும் ஆழ்துளை கிணறு பதிக்க அனுமதி இல்லை.

ஆரம்ப சுகாதார நிலையம்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் அருகில் இருக்கும் 10 கிராம மக்கள் கூடும் இடமான கதிராமங்கலத்தில் அனைத்து வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும். கதிராமங்கலத்தில் நேரடி அரசுப் பள்ளி அமைய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications