அரவக்குறிச்சியில் கே.சி. பழனிச்சாமி போட்டியிட மறுப்பு.. திமுக வேட்பாளர் யார்?
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் தாம் போட்டியிட முடியாது என ஏற்கனவே கே.சி. பழனிச்சாமி கூறிய நிலையில் திமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதில் அக்கட்சி தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் 2 தொகுதிகளுக்கும் தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.
இருப்பினும் தொடர்ந்து 2 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா அதிகரித்ததால் தேர்தலையே ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 2 தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இத்தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் தாம் போட்டியிட விரும்பவில்லை என ஏற்கனவே கே.சி. பழனிச்சாமி கூறியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை எப்படியும் தேர்தலில் அதிமுக வெல்ல வாய்ப்பிருக்கிறது; இது தமது 'மணல்' தொழிலுக்கு இடையூறாக அமைந்துவிடும். அதேநேரத்தில் வெற்றி பெற்றாலும் கூட அதிமுகவை வீழ்த்தியதால் அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டு அப்படியும் மணல் தொழில் பாதிக்கப்படும் என்பது கேசி பழனிச்சாமி கருதுகிறராம்.
இதை திமுக தலைமைக்கு கடந்த மாதமே கே.சி. பழனிச்சாமி கூறிவிட்டார். கே.சி. பழனிச்சாமியின் இந்த முடிவு திமுக தலைமையை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கே.சி. பழனிச்சாமியை போல வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவது குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.