தவறான வாக்குறுதிகளை அளித்து கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்துள்ளார்: தமிழிசை
திருச்சி: நிறைவேற்ற முடியாத அளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றி வரலாற்று சாதனைப் புரிந்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
டெல்லியில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி அறிவிக்கப்பட்டதும் கட்சியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் பதவியில் இருந்தபோது நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக செயல்பட்டார்.
கெஜ்ரிவால் மக்களிடம் தவறான வாக்குறுதிளை அளித்து வெற்றி பெற்றுள்ளார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. 8 மாதங்களில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் மோடி.
மோடிக்கு இன்னும் நல்ல இமேஜ் உள்ளது. ‘‘ஜன்தன் யோஜனா'' திட்டத்தில் நாடு முழுவதும் 11 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் வரம்பு மீறி செயல்படக்கூடாது என்று மோடி பலமுறை அறிவுறுத்தி உள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை. 29 அமைச்சர்கள் அங்கு தங்கி இருந்து விதிமுறைகளை மீறி செயல்படுகிறார்கள். நாங்கள் தற்போது அங்கு போராடி வருகிறோம். முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் திருச்சிக்கு வந்து சென்ற பின்னர் அதிக அளவில் ஸ்ரீரங்கத்தில் பண வினியோகம் நடந்துள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடாமல் தேர்தலை நடத்துவதால் தேர்தல் கமிஷன் மீது வழக்கு தொடருவது குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications