ஒன்றுக்கும் மேலான பாடங்களில் தோற்றாலும் துணைத் தேர்வு - கேந்திரிய வித்தியாலயாவுக்கு ஐகோர்ட் ஆர்டர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
11 ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிபதி தண்டபாணி முன் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம், 2018 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கி உள்ளதாக, மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ஒரு பாடத்தில் தோல்விய அடைந்தவர்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாக வாதிட்டனர்.
அதே நேரம், சம்பந்தப்பட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதல் பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த வழக்குக்கு அந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுத அனுமதி இல்லை என்ற விதிகள் உள்ளது எனவும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பு வாதிட்டது.
இந்த 2 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்றும், இது அவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications