ஒரே நாளில் மாறிய வாழ்க்கை, கடனாவாவது வச்சுக்கோ..அதிர்ஷ்டத்தை கையில் திணித்த தேவதை.. சூப்பர் ஜாக்பாட்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்துள்ளது.. சுமை தூக்கும் தொழிலாளியை தேடி அதிர்ஷ்டம் வந்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் யாருக்கு வரும், எப்படி வரும்னு யாருக்குமே தெரியாது. ஆனால் ரஜினி படத்தில் சொல்வது போல் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும்.
எல்லாருக்குமே வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல சந்தர்ப்பம் ஓரிருமுறை அமையும். அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர்கள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள். மாறாக வந்த வாய்ப்பையோ அல்லது அதிர்ஷ்டத்தையோ ஏற்காதவர்கள் அல்லது தனக்கு வந்திருக்கும் வாய்ப்பை பற்றி புரிதல் இல்லாதவர்கள் தோற்றுவிடுகிறார்கள்.
இது தாங்க அதிர்ஷ்டம்! ஏதேச்சையாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன பெண்
அதிர்ஷ்டசாலி யார்
சரி விஷயத்திற்கு வருவோம். திருவனந்தபுரத்தில் ஒருவர் கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்திருக்கிறது. இதுதான் ரியல் அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று பார்ப்போம். திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியில் வசிக்கும் 55 வயது நபர் பாபுலால் . இவர் அந்த பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
ஏழ்மை குடும்பம்
பாபுலால் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இவருக்கு சோபானா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தன்னுடைய சகோதரர் மற்றும் மாமா குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை பாபுலால் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா? என காத்திருந்தார். அங்கு தினமும் கடினம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கனியாபுரத்தில் உள்ள தனம் ஏஜென்சியில் இருந்து வாங்கி வந்து கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவார்.
விற்பனையாகவில்லை
அவரிடம் எப்போதாவது பாபுலால் லாட்டரி சீட்டு வாங்குவது உண்டு. அதன்படி செவ்வாய்கிழமை அங்கு வந்த இளம்பெண், குலுக்கல் நடைபெறும் நாள் நெருங்கி விட்டது. ஆனால் லாட்டரி சீட்டு அதிகமாக விற்பனையாகாமல் உள்ளது என்றும், எனவே 2 லாட்டரிகளை வாங்குமாறு பாபுலாலிடம் வற்புறுத்தி உள்ளார்.
பணத்தை பிறகு கொடு
ஆனால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். அதற்கு அவர் இப்போது பணம் தேவையில்லை, பின்னர் தந்தால் போதும் என்று கூறியதோடு பாபுலாலிடம் 2 லாட்டரி சீட்டுகளை கடனுக்கு கொடுத்து விட்டு சென்றார்.
எவ்வளவு கிடைக்கும்
இந்தநிலையில் பாபுலால் வைத்திருந்த லாட்டரிக்கு நேற்று முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்தது. கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததை அறிந்த தொழிலாளி மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். இது தன்னை தேடி வந்த அதிர்ஷ்டம் என்று பாபுலால் நெகிழ்ச்சி அடைந்தார். உண்மையிலேயே பாபுலால் சொல்வது போல் அதிர்ஷ்டம் தான்ங்க இது. இதுதான் அதிர்ஷ்டலட்சுமியே நம்மை தேடிவருகிறது என்று சொல்வார்கள். SE 989926 என்ற அந்த லாட்டரி எண்ணால் பாபுலால் இப்போது லட்சாதிபதியாகி உள்ளார். 30 சதவீதம் வரி மற்றும் கமிஷன் போக மீதமுள்ள பணம் பாபுலாலுக்கு பரிசாக கிடைக்கும். லாட்டரி சீட்டு கனரா வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.