தமிழக-கேரளா எல்லையில் கடத்தலைத்தடுக்க நடவடிக்கை... மொபைல் சோதனைச்சாவடி தொடக்கம்
செங்கோட்டை: கடத்தலைத் தடுக்க தமிழக கேரள எல்லையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் சோதனைச் சாவடி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக கேரளா எல்லை செங்கோட்டை அருகேயுள்ள ஆரியங்கா வழியாக அம்மாநிலத்திற்கு தடை செய்யப்பட்ட எரிசாராயம்,செம்மரக்கட்டை,புகையிலைப் பொருட்கள்,போதை பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வண்ணம் மதுவிலக்கு சோதனைச் சாவடி செயல்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ரயில்வே பாலம் அமைக்கும் பணியின் போது அந்த சோதனை சாவடி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.அதன்பின் வேறுபகுதியில் போதிய இடவசதி இல்லாமல் சாலையின் ஓரத்தில் டென்ட் அமைத்து மதுவிலக்கு போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அம்மாநில அரசு தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய சோதனை சாவடிகளை கணக்கெடுத்து 12 சோதனை சாவடிகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் 12 கண்டெய்னர்களில் தொலைபேசி, பேக்ஸ், ஜெராக்ஸ், வயர்லெஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு குளிர் சாதனத்தோடு எங்கும் இடமாற்றம் செய்யும் வண்ணம் மொபைல் சோதனை சாவடிகளை அமைத்துள்ளது.
அதன் முதல்கட்டமாக ஆரியங்காவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சோதனை சாவடி திறப்பு விழா இன்று (புதன்கிழமை) இரவு சுமார் 7 மணியளவில் ஆரியங்காவில் நடைபெற்றது.
அம்மாநில மதுவிலக்கு மற்றும் எக்சைஸ் துறையின் அமைச்சர் பாபு கலந்து கொண்டு மதுவிலக்கு சோதனை சாவடியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுவிலக்குஇணை ஆணையாளர் ஜோசப்,துணை ஆணையாளர் அப்துல் சலாம்,துணை கண்காணிப்பாளர் அனில்குமார்,கொல்லம் மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயன், உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.