மொறு மொறு பரோட்டா.. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மட்டும் ஃபேமஸ் ஏன்? சுடச்சுட சுவையான வரலாறு
பரோட்டா என்றும் அழைக்கப்படும் "புரோட்டா" ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கேரளாவிலும், தமிழகத்திலும் மட்டும் அதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வட மாநில ஊர்களில் பானிப் பூரி கடை போல தமிழகத்தின் பல பகுதிகளிலும், கேரளாவிலும் தடுக்கி விழுந்தால் புரோட்டா ஹோட்டல்கள் உள்ளன. ஏன் இவ்விரு மாநிலங்களில் மட்டும் பரோட்டோ படு ஃபேமஸ்? பரோட்டாவில் எத்தனை வகை உள்ளது? ஒரு சுவையான வரலாற்றை சுற்றிப் பார்ப்போமா. மேற்கு ஆசியாவைச் சேர்ந்த அரபு வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, பரோட்டா.
வட கேரளாவின் மலபார் பிராந்தியத்திற்கும், அரபு நாடுகளுக்கும், இஸ்லாமிய காலகட்டத்திற்கு முன்பிருந்தே வணிக தொடர்பு உண்டு. அப்படித்தான் பரோட்டா கேரளாவிற்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் உணவு ஆய்வாளர்கள். ஆரம்பத்தில் கோதுமையில்தான் பரோட்டா தயாரிக்கப்பட்டது. கேரளாவில் கோதுமை விளைவிக்கப்படாத நிலையில் கோதுமையில் பரோட்டா செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வியிலேயே அரபு நாட்டின் தாக்கம் அதில் இருப்பதை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் குருஷ் எஃப் தலால் என்ற மானுடவியல் ஆய்வாளர்.

நம்மிரு மாநிலங்களை தவிர, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலும் பரோட்டோ கலாச்சாரத்தோடு கலந்த உணவாக உள்ளது. பரோட்டாவின் முக்கிய இடுபொருள் மைதா மாவு. அடிக்கடி சாப்பிட கூடாது என்று பலரும் எச்சரிக்க காரணம் மைதாதான். ஆனால் சுவை கண்ட நாக்கு சும்மா இருப்பதில்லை. சரி மேட்டருக்கு வருவோம்.. மைதாவோடு எண்ணெய் மற்றும் ஏரியாவுக்கு தக்க சில இடுபொருளை சேர்த்து, இறுக்கி பிசைந்து, ஓங்கி அடித்து சுட்டு எடுத்தால் சுவையான பரோட்டா ரெடி.
பரோட்டா வகைகள்
பல வகையான பரோட்டாக்கள் உண்டு. மிருதுவான நூல் பரோட்டா எப்படி இருக்கும் என்றால், மெல்லிசாக, ஒளி ஊடுருவக்கூடிய அளவு அடுக்குகளைக் கொண்டிருக்கும். மதுரை வட்டாரத்தில் ஃபேமசான பன் பரோட்டா, ரொட்டி மற்றும் பரோட்டாவின் பல்வேறு கூறுகளை இணைத்து, மிருதுவான வெளிப்புறத்தையும் பஞ்சுபோன்ற உட்புறத்தையும் தருகிறது. இதில் காயின் பரோட்டா என்று ஒரு வகை உள்ளது. இது சைசில் சின்னது, ஆனால் திக்கானது.

சட்டி பால் பரோட்டா
சட்டி பால் பரோட்டா என்பது யாதெனில், தேங்காய் பால் மற்றும் காரமான இறைச்சி உணவுகளை வாழை இலையில் பொதித்து வைப்பதுதான். ஒரு வாழை இலை மீது பரோட்டை வைக்கப்பட்டு அதன் மீது பால் ஊற்றப்படுகிறது. பின்னர், உங்கள் விருப்பப்படி, கோழி, பன்றி என ஏதாவது ஒரு காரமாக சமைக்கப்பட்ட இறைச்சி உணவை அதன் மீது வைக்க வேண்டும். அதன் மீது மற்றொரு பரோட்டா வைக்கப்பட்டு, இதே செயல்முறை மீண்டும் செய்யப்படுகிறது. மூன்றாவது அடுக்கில் பரோட்டா வைக்கப்பட்டு பொரித்த வெங்காயம், முந்திரி மற்றும் கிஸ்மிஸ் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, பின்னர் ஒரு வாழை இலையால் மூடப்படுகிறது. சட்டி மூடியுடன் மூடப்பட்டு, சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் நீராவியில் வேகவைக்கப்படுகிறது. சட்டிப் பால் பரோட்டா ரெடி. கூடுதல் சுவைக்கு பிறகு மசாலா மற்றும் பால் ஊற்றிக்கொள்ளலாம்.

கிழி பரோட்டா
சமீப காலமாக எல்லா ஊர்களிலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது கேரளா ஸ்பெஷல் கிழி பரோட்டா. வாழை இலைக்கு உள்ளே பரோட்டா வேகவைக்கப்படுவது கிழி பரோட்டா. அந்த பரோட்டா உள்ளே இறைச்சி அல்லது முட்டை என உங்கள் விருப்பப்படி பொதிந்து வைக்கலாம் என்பதால், வாழை இலையை அவிழ்க்கும்போது நறுமணம் உங்கள் நாடி நரம்புகளை தூண்டிவிடும்.

கொத்து பரோட்டா
கொத்து பரோட்டா, நம்மூர்களில் வெகு பிரபலமாகிவிட்டது. ஆக்சுவலாக இதன் மூலம், இலங்கைதான். பிறகு மதுரை வட்டாரத்தில் பிரபலமாக ஆரம்பித்தது. சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வெங்காயம், மசாலா, முட்டை மற்றும் இறைச்சியுடன் பரோட்டா மிக்ஸ் செய்யப்பட்டு கொத்தி எடுக்கப்படுவதுதான் கொத்து பரோட்டா.

சிறப்பு சமையல்காரர்கள்
பரோட்டா தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சமையல் கலைஞர்களுக்கு ரொம்பவே டிமாண்ட் உள்ளது. சில உணவகங்கள் தங்கள் நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்த மாவை தயாரிப்பதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றன.













Click it and Unblock the Notifications