காங்கிரஸ் கட்சியில் குஷ்புவுக்கு சீட் இல்லை!
சென்னை: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் தரப்படவில்லை.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வுகளை முடித்த கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், கோபி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு களமிறக்கப்படலாம் என்ற செய்தி உலாவியது.
இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் 33 பேர் கொண்ட முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் குஷ்புவின் பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்புவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, "கட்சி மேலிடம் விரும்பினால் தான் ஆர்.கே.நகரில் போட்டியிட தயார்" எனக் கூறியிருந்தார்.
ஆர்.கே. நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதால் அந்த தொகுதியை விட்டுகொடுக்க மறுத்துவிட்டது திமுக தலைமை. இதனால் குஷ்புவுக்கு மயிலாப்பூரில் சீட் தரப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிலும் குஷ்புவின் பெயர் இடம்பெறவில்லை.












Click it and Unblock the Notifications