நக்மாவுடனான மோதல் உக்கிரம்- ராகுலை சந்திக்கவிடாமல் தடுத்ததாக குஷ்பு கடும் அதிருப்தி!
சென்னை வந்த ராகுல் காந்தியை சந்தித்து பேசவிடாமல் தடுத்துவிட்டதாக நக்மா மீது குஷ்பு கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகிகள் அனைவரும் அடிதடிமுடிவோடுதான் களத்தில் இருக்கிறார்கள். இப்போது நடிகைகள் நக்மாவுக்கும் குஷ்புவுக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முகவரியாக இருப்பதே கோஷ்டி மோதல்கள்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜான்சி, ஹசீனா கோஷ்டியினர் தலைமுடியை பிடித்து இழுத்து, ஆபாசமாக திட்டி, உதைத்து ஒரே ரணகளமாகிப் போனது சத்தியமூர்த்தி பவன்.
இந்த நிலையில் குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் இடையேயான பகிரங்க மோதல் இப்போது வெடித்து வீதிக்கு வந்துள்ளது. சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச நடிகை குஷ்பு முயற்சித்திருக்கிறார்.
ஆனால் குஷ்புவின் முயற்சிக்கு எந்த பலனும் இல்லை. நடிகை நக்மாதான் திருநாவுக்கரசர் மூலமாக தம்மை சந்திக்கவிடாமல் சதி செய்துவிட்டதாக கடும் கோபத்தில் இருக்கிறாராம் குஷ்பு.
அண்மைக்காலமாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இருப்பதாலேயே திருநாவுக்கரசரும் நக்மாவும் கை கோர்த்து தமக்கு எதிராக செயல்படுகிறார்கள் என குமுறுகிறாராம் குஷ்பு. இப்படியே ஓரம்கட்டி வைத்தால் எப்படி கட்சியில் நீடிக்க முடியும் என கடும் அதிருப்தியையும் குஷ்பு வெளிப்படுத்தி வருகிறாராம்.
அடுத்த பஞ்சாயத்து ரெடி!